அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் வெளியிட்ட ஓட்டுநர்-நடத்துநர்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் வெளியிட்ட ஓட்டுநர்-நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்த கூடாது, மது அருந்த கூடாது என்ற சாலை விதிகள் நடைமுறையில் உள்ளது. ஆனால், சமீபகாலமாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஒரு கையில் செல்போன் மறுகையில் ஸ்டியரிங் பிடித்தபடி பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பேருந்தை இயக்கி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.
சமீபத்தில், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது, அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் பொழுது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியானது.
இதைத்தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் பொழுது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பை கேள்வி கேட்கும் விதமாக தற்போது சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
மேலும் படிக்க: பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு.. நாதக நிர்வாகி புழல் சிறையில் அடைப்பு
அதாவது, சென்னை வடபழனி பணிமனையில் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநராக பணியாற்றி வருபவர்கள் இன்று பயணிகளுடன் பேருந்து இயக்கி கொண்டிருக்கும்போது ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று தெரிந்தும் ஓட்டுநரும், நடத்துநரும் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு மட்டும் ஒட்டுமொத்தமாக அரசு பேருந்துகளின் வாயிலாக ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு.. ரயில்-விமான சேவைகள் பாதிப்பு
அதில் 78 நபர்கள் உயிரிழந்துள்ளனர், வாகனத்தை இயக்கும் போது இது போன்று ஆபத்தான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது ரீல்ஸ் எடுப்பது உள்ளிட்ட காரணங்களால் விபத்துக்கள் அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
What's Your Reaction?