வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்..அக்.27ல் தவெக மாநாடுக்கு அழைப்பு விடுத்த விஜய்
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம், தவெக கட்சி கொடியையும், கட்சி பாடலையும் தலைவர் விஜய் அறிமுகப்படித்தினார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு இருக்கும் எனவும் தங்கள் கட்சி கொள்கை மற்றும் கோட்பாடுகள் குறித்து முறையாக முதல் அரசியல் மாநாட்டில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலையில் மாநாடு நடத்துவதற்கு கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளித்திருந்தார். 33 நிபந்தனைகளுடன் விக்கிரவாண்டியில் தவெக கட்சி முதல் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. தவெக முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.
நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள். கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு. வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது. தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஐப்பசி மாதத்தில் தீபாவளி முன்பாகவே பட்டாசு வெடிக்க தயாராகி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
What's Your Reaction?