உச்சநீதிமன்றம் வரை சென்ற திருப்பதி லட்டு.. சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு!

''திருப்பதி கோயிலில் பிரசாதாமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பொது சுகாதாரம் மற்றும் கோயிலில் புனிதத்தை அவமதிப்பதுபோல் உள்ளது'' என்று சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Sep 23, 2024 - 15:50
Sep 23, 2024 - 15:51
 0
உச்சநீதிமன்றம் வரை சென்ற திருப்பதி லட்டு.. சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு!
Subramanian Swamy

டெல்லி: ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. யாரும் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு வந்தால் நாம் முதலில் கேட்பது லட்டு எங்கே என்றுதான். அந்த அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்ற, தனித்துவ சுவை கொண்ட திருப்பதி கோயில் லட்டை யாரும் விரும்பாமல் இருக்க முடியாது. 

இதற்கிடையே திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் ஹாட் டாபிக் ஆக உள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதை உறுதிப்படுத்தும்விதமாக திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது. 

அதாவது திருப்பதி லட்டுகள் செய்ய பயன்படுத்தும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தது பக்தர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களத்திலும் திருப்பதி லட்டுகள் குறித்த பேச்சுதான் உலவி வருகிறது. இந்த ஆய்வு அறிக்கை உண்மை என்றால் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் முதல் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வரை பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

திருப்பதி லட்டு விவகாரம் இப்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. அதாவது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், ''திருப்பதி கோயிலில் பிரசாதாமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பொது சுகாதாரம் மற்றும் கோயிலில் புனிதத்தை அவமதிப்பதுபோல் உள்ளது. 

இந்திய அரசியலமைப்பு சட்டம் 142 பிரிவின்படி பொது நலன் கருதி இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு நீதியை உறுதி செய்ய வேண்டும்.இந்த விவாகாரம் தொடர்பாக முழுமையாக விசாரிக்க உச்சநீதிமன்றம் விசாரணை குழு அமைக்க வேண்டும். மேலும் லட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை முழுமையாக ஆய்வகத்தில் பரிசோதனை செய்து அது தயாரிக்கப்பட்ட விதம், அதன் தரம் உள்ளிட்டவற்றை கண்டறிய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ’எக்ஸ்’தளத்தில் பதிவிட்ட சுப்பிரமணியன் சுவாமி, ‘’திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சந்திரபாபு நாயுடு முன்வைத்திருந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow