10,000 பேரை கொன்றதாக புகார்.. பொறுப்பேற்று கொள்ள தயார்-ரோட்ரிகோ டுட்டெர்டே
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்று கொள்ள தயாராக இருப்பதாக பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்த ரோட்ரிகோ டுட்டெர்டே, ’போதைப்பொருளுக்கு எதிரான போர்’ என்ற பெயரில் ஏராளமானோரை படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நாவின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பிதுள்ள உத்தரவின் அடிப்படையில் ரோட்ரிகோ டுட்டெர்டே கைது செய்யப்பட்டார். ஹாங்காங்கில் இருந்து பிலிப்பைன்ஸ் திரும்பிய ரோட்ரிகோ டுட்டெர்டேவை மணிலா விமான நிலையத்தில் வைத்து போலீசார் கடந்த 11-ஆம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்று கொள்ள தயாராக இருப்பதாக பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாடு தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரோட்ரிகோ டுட்டெர்டே இன்று ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
ரோட்ரிகோ டுட்டெர்டே குற்றச்சாட்டு விவரம்:
டாவோவின் மேயராக இருந்த ரோட்ரிகோ அந்நகரத்தை பாதுகாப்பது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் மூலம் பிரபலமானார். தொடர்ந்து, கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இவர் ’போதைப்பொருளுக்கு எதிரான போர்’ என்ற பெயரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களை கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவ தொடர்பாக இவர் மீது 2022-ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது ரோட்ரிகோ டுட்டெர்டே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






