கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்திய பக்தர்கள்.. கோயில் நிர்வாகம் தகவல்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 3 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 627 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் முதன்மை கோயிலான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதிலும், விஷேச நாட்களில் கோயிலில் அலைக்கடலென பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அதிகப்படியான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில் 27 நாட்களில் கோயில் உண்டியல் நிரம்பி வழிந்துள்ளது. இதையடுத்து, நேற்று (மார்ச் 27) கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டுள்ளது.
காணிக்கை விவரம்
கடந்த 27 நாட்களில் 3 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 627 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உண்டியலில் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், ஆயிரத்து 224 கிராம் தங்கமும், 22 ஆயிரத்து 870 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகளும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கல்லூரி மாணவியர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?






