விஜய்யால் பாஜகவிற்கு தான் பாதிப்பு.. திராவிட கட்சிகளுக்கு இல்லை - துரை வைகோ அதிரடி
நடிகர் விஜய் சமூக நீதியையும் மதசார்பின்மையும் முன்னிறுத்தி அரசியல் செய்தால், பாஜகவிற்கு தான் பாதிப்பே தவிர, திராவிட கட்சிகளுக்கு அல்ல என்று மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய துரை வைகோ, “உதயநிதிக்கு வாரிசு அடிப்படையில் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவில்லை. அவருடைய திறமை மற்றும் செயல்பாடு காரணமாகவே அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமாக இதனை தீர்க்க முடியாது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் அடிப்படையிலேயே இதனை அணுக வேண்டும். தேர்தல் பத்திரத்தில் பாஜக பல்வேறு முறைகேடுகளில் செய்துள்ளது. தேர்தல் பத்திரத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. பரந்தூர் விமான நிலையத்தை பொருத்தவரை அங்குள்ள மக்களின் எண்ணங்களை கேட்டு அதன் அடிப்படையிலேயே திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
திருமாவளவனின் மது விலக்கு மாநாட்டிற்கு 100 சதவீதம் எங்களின் ஆதரவை அளிக்கிறோம். பூரண மதுவிலக்கு தான் எங்களின் எண்ணமும். அரசியல் இயக்கங்கள் நினைத்தால் மட்டும், பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும் மக்கள் நினைத்தால் தான் பூரண மதுவிலக்கு சாத்தியம்.
தமிழகத்தில் கடுமையான நிதி தட்டுபாடு உள்ளது. நிதி நெருக்கடி உள்ளது. மத்திய அரசின் ஒத்துப்பு தமிழக அரசுக்கு இல்லை. தமிழக பள்ளி கல்வித்துறையும் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. ஆனால் மத்திய அரசு பள்ளி கல்வி துறைக்கான நிதியையும் தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
தமிழக மக்களுக்காக நிதிக்கு கையேந்தி தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். இதில் வேறு எந்த அரசியல் காரணங்களும் இல்லை. நாங்கள் என்ன சொன்னாலும் முதல்வர் செய்து கொடுக்கிறார்.
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை இந்த தருணத்தில் தேவையில்லை என்பது தான் மதிமுகவின் நிலைப்பாடு. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் தான் ஏற்படும் பாஜகவை தமிழகத்தில் கொண்டுவரக் கூடாது என்பதற்காக தான் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் அந்த எண்ணம் சிதைந்து விடும்.
சமூக நீதி, திராவிட பாரம்பரியங்களை சொல்லித்தான் விஜய் அரசியலுக்கு வருகிறார். முழு நேர அரசியலுக்கு வரும்பொழுதுதான் மக்கள் அவரை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பது தெரியும். அவர் சமூக நீதியையும், மதசார்பின்மையையும் முன்னிறுத்தி அரசியல் செய்தால், அதன் பாதிப்பு திராவிட கட்சிகளுக்கு ஏற்படாது. மதவாக பாஜகவிற்கு தான் பாதிப்பு ஏற்படும்” என்றார்.
What's Your Reaction?