தைரியத்தை பாராட்டுறேன்.. ஆனால் உறுதியா இருக்கனும்.. திருமாவளவனுக்கு சீமான் வாழ்த்து

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன் என்றும் இனிவரும் காலங்களில் தன்னுடைய நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Sep 14, 2024 - 20:10
Sep 14, 2024 - 20:10
 0
தைரியத்தை பாராட்டுறேன்.. ஆனால் உறுதியா இருக்கனும்.. திருமாவளவனுக்கு சீமான் வாழ்த்து
திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன் - சீமான்

மதுரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சீமான், "கோவை அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார், அன்னபூர்ணா உரிமையாளர் நேரில் வரவழைத்து மிரட்டப்பட்டு உள்ளார். தொழில் நிறுவனத்தின் அதிபருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன நிலை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டது தவறு என தெரிந்து அண்ணாமலை மன்னிப்பு கேட்டதை வரவேற்கிறேன். 

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்தது இந்திராகாந்தி தான் என்பது எல்லோருக்கும் தெரியுமே, அதற்கு பின்னர் எந்த பிரதமரும் பதவிக்கு வரவில்லையா? பிரதமர் நாற்காலி காலியாக இருந்ததா? இலங்கை தமிழர்களை கொல்ல இந்திய பிரதமர்கள் பல கோடிகளை வட்டியில்லா கடனாக கொட்டி கொடுத்து இருக்கிறார்கள், 

பாஜக 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளதே கட்சத்தீவை மீட்கும் நடவடிக்கைகள் ஏன் எடுக்கவில்லை? காலடியில் உள்ள சின்ன நாடான, இலங்கை நாட்டிடம் இந்தியா கைகட்டி நிற்பது எவ்வளவு கேவலம்? தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதே குஜராத், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில மீனவர்கள் என்றால் மத்திய அரசு சும்மா விட்டு விடுமா?, குஜராத், பீகாரில் வெள்ளம் என்றால் ஒடோடி வரும் மத்திய அரசு தமிழகத்தில் வெள்ளம் என்றால் எட்டி கூட பார்ப்பதில்லையே, பகை நாடாக பாக்கிஸ்தான் இருந்தாலும் மீனவர்களை கைது மட்டுமே செய்கிறது, 

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன். 2021 சட்டமன்ற தேர்தலில் இதே முழக்கத்தை வைத்து திருமாவளவன் தேர்தலை சந்தித்து இருக்கலாமே?, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டும் நிலைப்பாட்டில் திருமாவளவன் பின் வாங்காமல் இருக்க வேண்டும்.

மதுவை ஒழிப்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை. மது ஒழிப்பு மாநாட்டுக்கு திருமாவளவன் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை அழைக்கவில்லை. எதிர்வரும் தேர்தலில் மது ஒழிப்புக்கு ஆதரவாக உள்ள கட்சிகளுடன் திருமாவளவன் அணி சேர வேண்டும். ஆட்சி அதிகாரித்தில் பங்கு வேண்டும் என திமுகவையும் சேர்த்து தான் திருமாவளவன் சொல்கிறார்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பவன் கல்யானுக்கு கூட்டணி ஆட்சியில் பங்கு கொடுத்தது போல திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்குமா? கலைஞர் குடும்பத்தில் தான் துணை முதல்வர்கள் இருப்பார்களா? நாட்டில் யாரும் துணை முதல்வர் ஆகக்கூடாதா? இவர்கள் வீட்டில் இருந்து தான் துணை முதல்வராக வருவார்களா? இதை எதிர்த்து தான் திருமாவளவன் கேள்வி கேட்கிறார். இனிவரும் காலங்களில் தன்னுடைய நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருக்க வேண்டும்.

விஜய் மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதற்கு நாட்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநாட்டுக்கு அனுமதி பெற கால அவகாசம் வேண்டும். புதிதாக கட்சி தொடங்கும் போது அதிகாரத்தில் உள்ளவர்கள் நெருக்கடி தருவது வாடிக்கையாக உள்ளது. விஜய் அரசியலுக்கு புதிது, நான் கட்சி துவங்கிய போது பல இன்னல்களை சந்தித்தேன், விஜய் தற்போது தான் கட்சி துவங்கிய உள்ளார். அவர் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது.

வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழகத்தில் செயல்பட்ட பல நிறுவனங்கள் ஏன் தமிழகத்தை விட்டு வெளியேறியது? 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்கள் எங்கே முதலீடு செய்ய போகிறது. ஜெயலலிதா காலத்தில் இருந்தே முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது, அப்புறம் ஏன் தமிழ்நாடு வளர்ச்சியடையவில்லை, 31 இலட்சம் அல்ல 3,000 பேருக்கு வேலை கொடுத்ததை நிரூபிக்க முடியுமா?" என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow