Devanathan Case : தேவநாதன் மீது 800க்கும் மேற்பட்டோர் புகார்.. 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க போலீஸ் மனு
Win TV Devanathan Case : மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் மீது 800க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ள நிலையில், அவரை 10 நாள் காவலில் விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 525 கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு திரும்ப கொடுக்க நிறுவனம் மறுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து 144 முதலீட்டாளர்கள் தங்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளதாக சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமை நாதன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தேவநாதன் மீதான புகார்களின் எண்ணிக்கை தற்போது 800 அதிகரித்துள்ளது. மொத்தம் 94 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதன் உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக 10 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று அல்லது திங்கட்கிழமை விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
What's Your Reaction?