பேரிடர் நிதி இருக்கு.. ஆனா இல்ல.. தமிழகத்திற்கு ஷாக் கொடுத்த மத்திய அமைச்சர் அமித்ஷா
ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு ஆயிரத்து 554 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி கரையை கடந்தது. இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடு மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைந்தன. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் மழையின் அளவு வழக்கத்தை விட அதிக அளவில் பதிவானது. மேலும், புயல், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய குழுவினர் கடந்த டிசம்பர் 7 மற்றும் 8-ஆம் தேதி தமிழ்நாட்டில் புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய வருகை தந்தனர்.
அதுமட்டுமல்லாமல், மத்திய பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான மத்திய குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, ஃபெங்கல் புயல் தற்காலிக மற்றும் நிரந்தர மறு சீரமைப்புப் பணிகளுக்கு ஆயிரத்து 675 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து, தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி தலைமையிலான அரசு உறுதியோடு துணை நிற்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை நிதி உதவியின் கீழ் ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு ஆயிரத்து 554 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 27 மாநிலங்களுக்கு மத்திய அரசு 18,332.80 கோடி ரூபாய் முன்பு விடுவிக்கப்பட்ட நிலையில் இப்போது இந்த நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் சார்பில் ஆறாயிரத்து 675 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
The Modi government stands like a rock in support of the disaster-affected people.
Today, the MHA approved an additional central assistance of Rs. 1554.99 crore to Andhra Pradesh, Nagaland, Odisha, Telangana, and Tripura under the NDR fund. This is in addition to the Rs.… — Amit Shah (@AmitShah) February 19, 2025
What's Your Reaction?






