குணால் கம்ரா விவகாரம்.. சென்னையில் முன்ஜாமின் கோரியது ஏன்? முழு விவரம்
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, முன்ஜாமின் கேட்டு தொடர்ந்த மனுவை அவசர மனுவாக இன்று மதியம் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார்.
இதனால், கொந்தளித்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். சிவசேனா கட்சியினர் நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா மீதும் அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவைச் சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீதும் மும்பை காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்தனர். எனினும், இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சென்னையில் முன்ஜாமின்
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் . அந்த மனுவில் தனது சொந்த ஊர் விழுப்புரம் என்றும் தான் மும்பை சென்றால் தன்னை போலீஸார் கைது செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவசேனா தொண்டர்களால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதால் முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் எஸ். சுரேஷ் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். சுந்தர் மோகன் முன்பாக முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்று கொண்ட நீதிபதி, மனுவை இன்று பிற்பகல் விசாரிப்பதாக தெரிவித்தார்.
What's Your Reaction?






