ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றச்சாட்டு உண்மையல்ல- சீருடை பணியாளர் தேர்வாணையம் அதிரடி
ஏடிஜிபி கல்பனா நாயக் தன்னை கொல்ல சதி திட்டம் நடைபெற்றதாக புகாரளித்த நிலையில் அவர் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என சீருடை பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக கல்பனா நாயக் இருந்தபோது ஜூலை மாதம் 29-ஆம் தேதி திடீரென எழும்பூர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் குறிப்பாக ஏடிஜிபி அறையில் தீ விபத்து நடந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். முதற்கட்டமாக ஏசி மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தீ விபத்து நடந்த போது அறையில் ஏடிஜிபி கல்பனா நாயக் இல்லை.
இந்த நிலையில், தீ விபத்து நடந்த 15 நாட்களுக்குப் பிறகு விடுப்பில் சென்றிருந்த ஏடிஜிபி கல்பனா நாயர், தமிழக டிஜிபி, உள்துறைச் செயலர் மற்றும் தலைமைச் செயலருக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது அலுவலகத்தில் நடந்த தீ விபத்து தன்னை கொல்ல நிகழ்த்தப்பட்ட சதி என பரபரப்பு குற்றச்சாட்டை புகாரில் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் தேர்வில் முடிவுகள் வெளியான விவகாரத்தில் இடஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு இருப்பதாக தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது குறித்து சுட்டி காட்டப்பட்டதாகவும், இது தன்னுடைய உயிருக்கு ஆபத்தாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்து நடந்து 15 நாட்களாகியும் சம்பந்தப்பட்ட அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கல்பனா நாயக், தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், சென்னை காவல் ஆணையருக்கும் இந்த புகார் அளிக்கப்பட்டதாக கல்பனா நாயர் தெரிவித்தார். ஏடிஜிபி கல்பனா நாயக் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் திட்டமிடப்பட்ட தீ வைப்பு சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றச்சாட்டு உண்மை இல்லை என சீருடை பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. அதில், 2023-ஆம் ஆண்டு 750 உதவி ஆய்வாளர் தேர்வு பட்டியலுக்கான இறுதிப்பட்டியல் ஜனவரி 30-ல் வெளியிடப்பட்டது. தேர்வர்கள் சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சீருடை பணியாளர் தேர்வாணையம் மீண்டும் இறுதிப் பட்டியலை அக்டோபர் 3-ஆம் தேதி வெளியிட்டது. மேலும், ஏடிஜிபி கல்பனா நாயக், சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் விதிமீறல் இருப்பதாக சுட்டிக்காட்டி கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என குறிப்பிட்டுள்ளது.
What's Your Reaction?