”குழந்தை தாயிடம் சொல்வது போல” துணை முதல்வர் உதயநிதியின் உருக்கமான உரை

ஏதாவது பட்டமோ, பரிசோ கிடைத்தால் ஒரு குழந்தை தனது தாயிடம் சென்று காண்பிக்க நினைக்கும். அதுபோல தான் தமிழ்நாடு துணை முதலமைச்சர் என்கிற உயரிய பொறுப்பு ஏற்ற பிறகு தாய்மார்களான மகளிரை சந்திக்க வந்திருக்கிறேன் என துணை முதலமைச்சரான உதயநிதி தெரிவித்துள்ளார்

Sep 30, 2024 - 20:56
 0
”குழந்தை தாயிடம் சொல்வது போல” துணை முதல்வர் உதயநிதியின் உருக்கமான உரை

ஏதாவது பட்டமோ, பரிசோ கிடைத்தால் ஒரு குழந்தை தனது தாயிடம் சென்று காண்பிக்க நினைக்கும். அதுபோல தான் தமிழ்நாடு துணை முதலமைச்சர் என்கிற உயரிய பொறுப்பு ஏற்ற பிறகு தாய்மார்களான மகளிரை சந்திக்க வந்திருக்கிறேன் என துணை முதலமைச்சரான உதயநிதி தெரிவித்துள்ளார்

இந்தியாவிலேயே மகளிர் மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்வதாகவும் எல்லா வகையிலும் பெண்கள் மேலே வர வேண்டும் என அரசு மகளிருக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்ற  மாநில அளவிலான மணிமேகலை விருதுகள்,வங்கியாளர் விருதுகள்,நகர்புற சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார்...

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

விருதுகளை வழங்கிய பிறகு விருது பெற்ற சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக மேடையில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”ஏதாவது பட்டமோ,பரிசோ கிடைத்தால் ஒரு குழந்தை தனது தாயிடம் சென்று காண்பிக்க நினைக்கும். அதுபோல தான் தமிழ்நாடு துணை முதலமைச்சர் என்கிற உயரிய பொறுப்பு ஏற்ற பிறகு தாய்மார்களான மகளிரை சந்திக்க வந்திருக்கிறேன். 

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 84 ஆயிரத்து 815 கோடி ரூபாய் மட்டுமே வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டது.. 92 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக அரசு மணிமேகலை விருது வழங்குவதையும் நிறுத்தி விட்டது. ஆனால் திமுக அரசு வந்தவுடன் விருது வழங்கி வருகிறோம். அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களே மகளிர் மீதுள்ள அக்கறைக்கு சிறந்து எடுத்துக்காட்டு” என உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “குழந்தைகளுக்கு காலையில்  உணவு வழங்க பெண்கள் சமைக்க கஷ்டப்படக்கூடாது என காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கினார். இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை என பலவேறு திட்டங்களை மகளிருக்காக திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே மகளிர் மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது. எல்லா வகையிலும் பெண்கள் மேலே வர வேண்டும் என அரசு மகளிருக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு 35 ஆயிரம் கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த இலக்கை விட அதிக கடன் வழங்கப்படும்” என அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow