நாங்கள் எல்.கே.ஜி. தான்.. மக்கள் புரிந்துகொண்டால் போதும் - அன்புமணிக்கு திருமாவளவன் பதில்

நாங்கள் எல்கேஜி படித்திருந்தாலும், சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

Sep 15, 2024 - 14:38
Sep 15, 2024 - 15:02
 0
நாங்கள் எல்.கே.ஜி. தான்.. மக்கள் புரிந்துகொண்டால் போதும் - அன்புமணிக்கு திருமாவளவன் பதில்
அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதில்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திருவாரூருக்கு செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது ஆரம்ப காலத்தில் இருந்தே விசிகவின் முழக்கம் இது. இயல்பான விளிம்பு நிலை மக்களின் அதிகார வேட்கைக்கான குரல். 2026 திமுக தேர்தல் கூட்டணியின்போது அழுத்தம் வைப்பது குறித்து முடிவெடுப்போம்.

மது ஒழிப்பு மாநாட்டை, ஏன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடாக பார்க்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் இதை முன்னெடுக்கிறோம். அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும். தேர்தல் அரசியலை அவரவர் வசதிக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம். இது ஒரு சமூகப் பிரச்சனை உள்ள விஷயம். வெறும் அரசியல் கணக்கு போட்டு பார்ப்பது, இந்த பிரச்சனையை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது.

போதைப் பொருட்கள் பெருகி வருவது தேசத்தின் மனித வளத்தை பாழாக்குகிறது. நாங்கள் எல்கேஜி படித்திருந்தாலும், சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும்” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதில் அளித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “மது ஒழிப்பில் பா.ம.க பி.எச்டி., படித்துள்ளது. திருமாவளவன் தற்போதுதான் எல்.கே.ஜி. வந்துள்ளார். திருமாவளவன் தற்போது தான் மது ஒழிப்பை தொடங்கி இருக்கிறார். ஆனால், எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர்” என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், “எக்ஸ் வலைதள பக்கத்தில் அட்மின் பதிவிட்ட பதிவில் திருத்தம் இருந்த நிலையில், அந்த பதிவு நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் என் அனுமதியுடன் திருத்தம் செய்யப்பட்டு பதிவிடப்பட்டது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நாங்கள் தேர்தல் அரசியலில் அடிவைத்த காலம் முதல், இதனை முழக்கமாக வைத்து வருகிறோம். கடந்த காலங்களிலும் கூட்டணியில் இருந்து கொண்டே மக்களின் பிரச்சனைக்காக எதிரணி கூட்டணியில் உள்ளவர்களுடன் இணைந்து செயலாற்றி இருக்கிறோம்.

பாமக விமர்சிக்கவில்லை, எங்களது முன்னெடுப்பை வரவேற்றுதான் பேசியுள்ளார்கள். பாமகவை பற்றி நான் சொல்லக்கூடிய கருத்தை பற்றி தான் கண்டித்து உள்ளார்கள். அப்படி சொல்ல வைத்தது அவர்கள் தான். முதன் முதலில் சிதம்பரத்தில் நான் தேர்தலில் நின்றபோது வன்முறையை தூண்ட காரணம் அவர்கள் தான்.

நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை; நாங்கள் காயப்படுத்தப்பட்டோம். தமிழர் நலனுக்காக நாங்கள் ரத்த கரையுடன் கை குலுக்கினோம். தலித் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக என்பதை மறுக்க முடியாது அதைத்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன்.

அவர், மது ஒழிப்பு குறித்த கருத்தில் நிலைப்பாடாக இருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எங்களால் அப்படி இணைந்து பயணிக்க முடியாது. தேர்தல் அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டை இணைத்து பார்ப்பதாலே, இவ்வளவு சர்ச்சை வருகிறது. இதை சமூக நலனுக்கானதாக பார்க்க வேண்டும்.

100% தூய நோக்கத்தோடு இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறோம். இதில் எந்த ஒரு அரசியல் கணக்கும் இல்லை. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது ஆரம்ப காலத்தில் இருந்தே எங்களின் முழக்கமாக உள்ளது. இந்த முழக்கம் என்பது இயல்பான விளிம்பு நிலை மக்களின் அதிகார வேட்கைக்கான குரல்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow