விஜய் இந்தியா கூட்டணிக்கு வருவது தான் நல்லது - செல்வப்பெருந்தகை பேட்டி
விஜய் இந்தியா கூட்டணியுடன் வருவது தான் அவருக்கும் நல்லது, அவரது கொள்கை கோட்பாடுகளுக்கும் நல்லது, எல்லோருக்கும் நல்லது என்பதைத்தான் ஒரு இந்திய பிரஜையாக எதார்த்தமாக நான் சொல்ல முடியும் என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 86 வது பிறந்த நாளையொட்டி, சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,
ஆர்எஸ்எஸ் போன்ற மதவாதக் கட்சிகளுக்கு எதிரானப் போர்க் குரலாக வாழ்ந்த வாழப்பாடியாரின் பிறந்தநாள் விழா காங்கிரஸ் சார்பாக இன்று கொண்டாடப்படுகிறது. அவருடைய காலத்தில் ஒருபோதும் மதவாத சக்திகளை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே கால்பதிக்க விடக்கூடாது என்று போராடிய மாபெரும் தலைவர். அவரின் குரல் ஏழை மக்களின் குரலாக, தேசத்தில் வாழ்கின்ற கோடான கோடி மக்களின் குரலாக இருந்தது. அப்படிப்பட்ட குரலுக்குச் சொந்தக்காரர் எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர், மிகவும் அனுபவம் வாய்ந்த தொழிற்சங்கவாதி. தொழிலாளர் நலனிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தலைவராக வாழ்ந்தவர்.
விஜய் பரந்துர் செல்லவுள்ளது தொடர்பான கேள்விக்கு, பரந்தூர் ஏகனாபுரம் ஆகியவை என்னுடைய ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வருகிறது. அங்கு பலமுறை சென்று நான் பார்த்திருக்கிறேன். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் அந்த மக்களுக்கு எந்தவித அச்சமும் இல்லாமல் அந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொல்லி இருக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைப்படுத்துகிறோம் என்று நாடாளுமன்றத்தில் பாஜகவின் அமைச்சர் சொன்ன பிறகு இந்த திட்டம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.
என்னைப் பொருத்தவரை அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அரசிற்கு பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறேன். அங்கு வாழக்கூடிய மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்கக் கூடாது. அதுதான் எல்லோரின் விருப்பம். அவர்களின் மூதாதையர்கள் காலம் காலமாக அந்த மண்ணில் வாழ்ந்தவர்கள், அந்த மண்ணை விட்டு போக வேண்டும் என்றால் அவர்களுக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் அதற்கு விருப்பமில்லை. ஆகவே மக்களின் கோரிக்கை தமிழ்நாடு அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும். இதுதான் எங்களின் கோரிக்கை என்று கூறினார்.
நிதிநிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். கடன் வாங்கி திட்டங்களைச் செயல்படுத்தும் அளவிற்கு தான் நிதிநிலைமே உள்ளது. அந்த அளவிற்கு கஜானாவை கடந்த கால ஆட்சியில் காலி செய்து விட்டார்கள். இப்போது உள்ள அரசு சிறந்த நிதி மேலாண்மையுடன் செயல்பட்டு வருகிறது.
பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். எவ்வளவோ கடன் வாங்கினார்கள் இதற்கும் கடன் வாங்கி இருக்கலாம். இனிவரும் காலங்களிலாவது அதைக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறினார்.
விஜய் தனது மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக அவர் பேசிய உரை, எதை வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஆனால் இந்த இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என்று அவர் முடிவு எடுப்பாரானால் இந்தியா கூட்டணியுடன் வருவது தான் அவருக்கும் நல்லது, அவரது கொள்கை கோட்பாடுகளுக்கும் நல்லது, எல்லோருக்கும் நல்லது என்பதைத்தான் ஒரு இந்திய பிரஜையாக எதார்த்தமாக நான் சொல்ல முடியும். செல்வபெருந்தகை பேட்டி.
விஜய் இந்தியா கூட்டணியில் வரவேண்டும் என்பதை காங்கிரஸின் அகில இந்திய தலைமை விரும்புகிறதா என்ற கேள்விக்கு, நாங்களோ அகில இந்திய தலைமையோ அந்த முடிவை எடுக்கவில்லை. அந்த முடிவு எடுக்கப்படும்போது இந்தியா கூட்டணியின் தமிழகத் தலைவர் முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கூறினார்.
ஈரோடு இடைத்தேர்தலுக்காக வருகிற திங்கள் கிழமை மாலை, காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழுவுடன் இணைந்து பிரசாரத்தை தொடங்கவுள்ளோம் என்று கூறினார்.
What's Your Reaction?