3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன...எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு... சிறப்பம்சங்கள் என்னென்ன?

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று முதல் அமலாகி உள்ளது.

Jul 1, 2024 - 10:06
Jul 2, 2024 - 12:25
 0
3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன...எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு... சிறப்பம்சங்கள் என்னென்ன?
New Criminal Law Will Effect From July 1, 2024

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) நடைமுறையில் உள்ளன. இந்த சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது இந்த 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அப்போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்பு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்ததால் இது சட்ட வடிவமானது. இந்நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இந்தியாவில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. 

இந்த புதிய சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மறுபக்கம் புதிய சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் 40 லட்சம் தன்னாா்வலா்களுக்கு மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

3 புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:-

* இந்த சட்டங்களின்படி, புகார் கொடுத்தவர்கள் மற்றும் புகாரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் இருந்து முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) நகலை பெற்றுக்கொள்ள முடியும். 

* ஒரு நபர் ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டால் உடனடியாக அவருக்கு தெரிந்தவர்களுக்கு தனது நிலையை தெரிவிக்க புதிய சட்டங்களில் வழிவகை உண்டு.

* பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதிக்கப்படாமல் உடனடியாக நீதி கிடைக்கும் வகையில், அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் மட்டுமின்றி எந்த ஒரு காவல் நிலையத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முடியும்.

* மேலும் காவல் நிலையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்.

* கொடூரமான, மிகப்பெரிய குற்ற வழக்குகளில் சாட்சியங்கள் கலைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய குற்றச்சம்பவம் நடந்த இடத்தை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

* ஆன்லைனில் புகார் பதிவு செய்தல் மற்றும் ஆன்லைன் மூலம் சம்மன் அனுப்புதல் என அனைத்து நடைமுறைகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.

* பெண்கள், குழந்தைகள் தொடர்பான முக்கிய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் இனி பெண் மாஜிஸ்திரேட்டுகள்தான் வாக்குமூலம் பெற முடியும், 

* கிரிமினல் வழக்குகளில் விரைவாக நீதி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றத்தில் முதல் விசாரணை முடிந்த 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். 

* பயங்கரவாத குற்றங்கள் இனி ராஜ துரோகம் என்பதற்கு பதிலாக தேசத் துரோகம் என வரையறுக்கப்படும்.
* சிறுமிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க புதிய சட்டங்கள் வழிவகை செய்கின்றன.

புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று போராட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow