தேர்வாணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் உயிரை பறிக்க சதி.. பெண் அதிகாரி புகார்

கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாகவும் தற்போது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக பணிபுரிந்து வரும் கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடந்திருக்குமோ? என்ற அடிப்படையில் புகார் அளித்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Feb 3, 2025 - 10:36
 0
தேர்வாணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் உயிரை பறிக்க சதி.. பெண் அதிகாரி புகார்
கல்பனா நாயக்

கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக கல்பனா நாயக் இருந்தபோது ஜூலை மாதம் 29-ஆம் தேதி திடீரென எழும்பூர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் குறிப்பாக ஏடிஜிபி அறையில் தீ விபத்து நடந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். முதற்கட்டமாக ஏசி மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தீ விபத்து நடந்த போது அறையில் ஏடிஜிபி கல்பனா நாயக் இல்லை.

இந்த நிலையில், தீ விபத்து நடந்த 15 நாட்களுக்குப் பிறகு விடுப்பில் சென்றிருந்த ஏடிஜிபி கல்பனா நாயர், தமிழக டிஜிபி, உள்துறைச் செயலர் மற்றும் தலைமைச் செயலருக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது அலுவலகத்தில் நடந்த தீ விபத்து தன்னை கொல்ல நிகழ்த்தப்பட்ட சதி என பரபரப்பு குற்றச்சாட்டை புகாரில் தெரிவித்துள்ளார். குறிப்பாக அந்த புகாரில் பாரபட்சம் இன்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் தேர்வில் முடிவுகள் வெளியான விவகாரத்தில் இடஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு இருப்பதாக தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது குறித்து சுட்டி காட்டப்பட்டதாகவும், இது தன்னுடைய உயிருக்கு ஆபத்தாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார். 

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்தபோது உதவி ஆய்வாளர் தேர்வில் இட ஒதுக்கீட்டில் நடந்த முரண்பாடுகளை சுட்டிக் காட்டியதை கடந்த ஆண்டு மார்ச் மாதம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். அதன் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக கமிட்டி அமைக்கப்பட்டு முரண்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து உயர் நீதிமன்றம் தொடர்புடைய அதிகாரிகள் தேர்வு பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்து வெளியிடுமாறு தெரிவித்தது. இந்த நிலையில் தான் ஜூலை 29-ஆம் தேதி சென்னை எழும்பூர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் பொழுது மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் மூலமாக அழைப்பு வ ந்தது. 
அதில் தன்னுடைய அறையில் தீ விபத்து நடந்திருப்பதாகவும் இதனால் அலுவலகம் வர வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார். 

இருப்பினும், தனது அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்த கல்பனா நாயக், தனது இருக்கை முழுவதுமாக எரிந்து கிடந்ததாகவும் சிறிது நேரத்திற்கு முன்பு வந்திருந்தால் என்னுடைய உயிரை இழந்து இருக்க நேரிடும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். தீ விபத்து என்பது, தான் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் முரண்பாடுகளை சுட்டிக் காட்டியதன் காரணமாக நடந்ததாக தெரிவித்துள்ளார். 

குறிப்பாக முந்தைய ஆண்டுகளில் நடந்த முறைகேடுகளையும் தெரிவித்ததால் தனது உயிருக்கு ஆபத்தாக மாறியதாக குறிப்பிட்டுள்ளார். தீ விபத்து நிகழ்ந்த தினத்தின்போது இறுதிப் பட்டியலை ஆய்வு செய்து குறைகளை நீக்கி திருத்தப்பட்ட பட்டியல் தயார் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தீ விபத்து நிகழ்ந்து 15 நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கல்பனா நாயக், தமிழக டிஜிபி  சங்கர் ஜிவாலிடம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுப்பை முடித்துவிட்டு புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், சென்னை காவல் ஆணையருக்கும் இந்த புகார் அளிக்கப்பட்டதாக கல்பனா நாயர் தெரிவித்துள்ளார். மேலும்,  தீ விபத்து நடந்த பிறகு திருத்தப்பட்ட பட்டியல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் ஆய்வு செய்யப்படாமல் வெளியிடப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தீ விபத்து தொடர்பாக உடனடியாக விசாரணையும் நடைபெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தனது  தலைமை அலுவலகத்திலேயே ஒரு மூத்த உயர் அதிகாரியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும், பல அதிகாரிகள் சுற்றி இருந்தும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ளார். ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை புகார் தொடர்பாக முறையான விசாரணை  நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார். சதி நடந்ததா என்பது குறித்து சென்னை காவல்துறை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக  ஏசி மின் கசிவு காரணமாக விபத்து நடந்ததாக தீயணைப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெண் உயர் அதிகாரி புகார் அளித்துள்ளதால் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow