ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்.. பக்தர்கள் சாமி தரிசனம்
திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய ராஜகோபுர கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அகர ஓகை பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலயத்தின் ராஜகோபுரத்திற்கு அஸ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 29-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் யாகசாலை, அனுக்ஜை பூஜை, நவக்கிரக பூஜை மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து, முதல் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று காலை (மார்ச் 31) இரண்டாம் கால யாக பூஜையைத் தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டது. ஆலயத்தை சுற்றி வந்த புனித நீர் கடங்கள் விமான கோபுரத்தை அடைந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று அலங்கார மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை மனமுருகி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
What's Your Reaction?






