ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு... 2 முறை வழக்கு ஒத்திவைப்பு!

''அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் தேவைப்படும். ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது''

Jul 7, 2024 - 10:20
Jul 8, 2024 - 12:45
 0
ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு... 2 முறை வழக்கு ஒத்திவைப்பு!
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூர் செம்பியம் காவல் நிலையம் அருகே நடந்த இந்த கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய ஆதரவாளர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை காணொளி வாயிலாக நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. அதேபோல் ஆம்ஸ்ட்ராங் உடலையும் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்க செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்'' என்றார்.

இதற்கு பதில் அளித்த அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''தேமுதிக அலுவலகம் 27,000 சதுர அடி கொண்ட பரந்த இடம். பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடத்தில் அமைந்துள்ளது. இதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது. இடம் வழங்க எங்களுக்கு மனம் இருந்தாலும் சட்டவிதிகளில் இடம் இல்லை'' என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய  அரசு வழக்கறிஞர், ''பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெருக்கடி நிறைந்த பகுதி. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 2000 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம்'' என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன், ''அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் தேவைப்படும். ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது. 

வீர வணக்கம் போன்ற நிகழ்வின்போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்ய முடியும்? போதுமான இடம் இல்லாமல் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை. ஆகவே அரசு ஒதுக்கும் இடத்தில் உடலை அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம். 

ஆர்ம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நீதிமன்றத்தில் பல முறை அவரை பார்த்துள்ளேன். ஆர்ம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேறு ஒரு நல்ல இடத்தை கூறும்படி நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன்.'' என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ''பேசி முடிவெடுத்து நல்ல முடிவோடு வாருங்கள்'' என்று பகுஜன் சமாஜ் கட்சி மனுதாரரிடம் நீதிபதி தெரிவித்தார். அதற்கு பகுஜன் சமாஜ் கட்சி மனுதாரர், '12 மணிக்கு எங்கள் முடிவை சொல்கிறோம்'என்று கூறியதால், நீதிபதி வழக்கு விசாரணையை 12 மணிக்கு தள்ளி வைத்தார்.

பின்பு 12 மணிக்கு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ''அரசு 200 சதுர அடிநிலம் ஒதுக்க தயாராக உள்ளத். திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் ஒரு ஏக்கர் நிலம் தர தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது. அங்கு மணிமண்டபம் அமைக்கலாம்'' என தெரிவித்தார்.

பின்பு தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்த  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''பெரம்பூரில் உறவினருக்கு சொந்தமான 7,500 சதுர அடி நிலம் உள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்'' என்றார். 

பெரம்பூரில் மனுதாரர் தரப்பில் தெரிவித்த 7,500 சதுர அடி நிலம் தொடர்பான வரைபடத்தைப் பெற்று பார்வையிட்ட நீதிபதி, எல் வடிவில் அமைந்துள்ள இந்த இடம், குடியிருப்பு நிலம் என்பதால் அதில் எப்படி அனுமதி வழங்க முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, ''குடியிருப்பு பகுதிகள் என்பதால் இந்த இடத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசிடம் கருத்து கேட்க வேண்டியதுள்ளது. இப்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, புதிய இடத்தில் அரசு அனுமதி பெற்று மணிமண்டபம் அமைக்கலாம். 

குடும்ப உறுப்பினர் நிலத்தை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும். அரசு அனுமதி பெற வேண்டும். அதுவரை உடலை பள்ளியிலேயே வைத்திருக்க முடியாது. நாளை பள்ளி திறக்கப்பட வேண்டும்.  ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி உடல் முன் அமர்ந்து எப்போதும் அழுது கொண்டிருக்க முடியாது. இந்த துயரத்தில் இருந்து அவர் மீண்டும் வர வேண்டும். ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும். 

முதலில் அரசு கூறும் இடத்தில் அடக்கம் செய்த பின், வேறு இடத்துக்கு மாற்றலாம். புதிய இடத்தில் அடக்கம் செய்வதற்கான, மணி மண்டபம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும். அந்த இடம் குடியிருப்பு பகுதி என்பதால் உடலை அடக்கம் செய்ய இயலாது. இதற்கு சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம்'' என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும் கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்ய கோரிய விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்து விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகி விட்டது எனத் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றம் தனது அதிகார வரம்பை தாண்ட முடியாது. அரசு தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ''ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி நினைவிடம் உள்ளது. ஆனால், உடல் டில்லியில் தகனம் செய்யப்பட்டது. அதேபோல, உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு விசாலமான இடத்தை தேர்ந்தெடுத்து, அரசு அனுமதி பெற்று மணிமண்டபம் அமைக்கலாம். எதிர்காலத்தில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தாலும் இடையூறுகள் இருக்காது. 

இதையடுத்து, தற்போதைக்கு அரசு ஒதுக்கும் நிலத்தில் அடக்கம் செய்து விட்டு, பின் வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்க வேண்டும்'' என்று மனுதாரர் பொற்கொடி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்பு இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow