அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள்.. பஞ்சாப் வந்தடைந்த விமானம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது.
அமெரிக்காவில் கடந்த 20-ஆம் தேதி அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முதல் படியாக அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில், பிரேசில், மெக்சிகோ, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் குடிமக்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்படி, சி-17 என்ற ராணுவ விமானத்தில் நேற்று 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் வந்த ராணுவ விமானம் நேற்று பிற்பகல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் குருராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
அமெரிக்க ராணுவத்தின் விமானம் மூலம் 79 ஆண்களும் 25 பெண்களும் நாடு திரும்பி உள்ளனர். இதில், 30 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், ஹரியானா, குஜராத்தை சேர்ந்த தலா 33 பேர், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரை சேர்ந்த 2 பேரும் இதில் அடங்குவர்.
முன்னதாக அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும், இந்தியர்கள் எத்தனை பேர் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
இதுகுறித்து பேசிய டிரம்ப், “சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் தொடர்பாக மோடியுடன் விவாதித்ததாக தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்து சரியானதைச் செய்வார்” என்று கூறினார். இதையடுத்து இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.
இதற்கிடையில், வரும் 13-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். அப்போது அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்காவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக புள்ளி விவரம் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?