திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்.. பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற வைரத்தேரோட்டத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக இன்று உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு தீபாராதணைகள் நடைபெற்றது. பின்னர், 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.
முருக பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் கீழ ரத வீதி, மேல ரத வீதி, பெரிய ரத வீதிகள் வழியாக வலம் வந்தது.தொடர்ந்து இன்று இரவு சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்ப திருவிழா நடைபெறும். விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள்வார். அங்கு பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுத்து தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சாமியை தரிசனம் செய்வார்கள்.
இதே போல இரவு மின் ஒளியிலும் தெப்ப மிதவைத்தேரில் சுவாமி எழுந்தருள மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகள் கோயில் அரக்காவலர் குழு தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?