Savukku Shankar : சிறையில் இருந்து வெளிவந்தவுடன் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த சவுக்கு சங்கர்!

Savukku Shankar Criticized CM Stalin : ''இது தனிநபருக்கு நடந்த கொடுமையாக பார்க்க கூடாது. ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்ட கொடுமையாக தான் பார்க்க வேண்டும். 5 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளி வந்திருக்கிறேன்'' என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

Sep 25, 2024 - 20:07
Sep 26, 2024 - 14:23
 0
Savukku Shankar : சிறையில் இருந்து வெளிவந்தவுடன் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த சவுக்கு சங்கர்!
Savukku Shankar And MK Stalin

Savukku Shankar Criticized CM Stalin : தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அவர் மீது குண்டர் குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்த குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில்,  2 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது 2வது குண்டர் சட்டமும் பாய்ந்தது. 

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், வழக்கு விசாரணையின்போது சவுக்கு சங்கர்()Savukku Shankar மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ததுடன், அவரது தாய் தொடர்ந்த வழக்கையும் முடித்து வைத்தது. மேலும் வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால் சவுக்கு சங்கரை ஜாமீனில் விடுவிக்கவும் காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளியில் வந்தார்.

சவுக்கு சங்கர் செய்தியாளர் சந்திப்பு :

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர், ‘’என் மீது பொய்யாக கஞ்சா வழக்கு போட்டு பெண் காவலர்களையும், அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக 17 வழக்குகள் பதிவு செய்து இருந்தனர். தமிழகம் முழுவதும் போலீஸாரால் அலைக்கழிக்கப்பட்டேன். மேலும் கோவை சிறையில் எனது வலது கையை உடைத்தனர். கையில் எனக்கு 3 இடங்களில் எழும்பு முறிவு ஏற்பட்டது. 

ஒவ்வொரு முறையும் காவல்துறையினர் என்னை விசாரணையில் எடுக்கும்போதும் திமுக அரசிற்கு எதிராக எதுவும் பேசக்கூடாது. திமுக அரசுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று நிபந்தனையாக கூறினார்கள். இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உடனடியாக உங்களை விடுவிப்போம். அதை மீறினால் நாங்கள் ஒரு வருடத்துக்கு உன்னை சிறையிலிருந்து விடமாட்டோம் என கடுமையாக நெருக்கடி கொடுத்தார்கள். நான் எதற்கும் அஞ்ச மாட்டேன் என அவர்களிடம் பதில் அளித்தேன்.

அதன் காரணமாக இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் என்னை கைது செய்தார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல. விமர்சனங்களை பார்த்து பழகியவரோ.? வளர்ந்தவரோ.? அல்ல. உண்மையை சவுக்கு மீடியா 8 மாதங்களாக வெளிகொண்டுவந்தததன் காரணமாகத்தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு அலுவலகம் சீலிடப்பட்டது, வீடுகளும் சீலிடப்பட்டுள்ளது. எனது தாயாரின் பென்ஷனும் முடக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடக்கும் எந்தவித உண்மையும் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக முதல்வரும், உதயநிதி ஸ்டாலினும் மிக கவனமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் விவகாரம் அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மாற்ற வேண்டும் என பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் தமிழக டிஜிபி சங்கர் ஜி வால் தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் சர்வ சாதாரணமாக கடத்தப்படுகிறது. அதை தடுக்க வேண்டும். அதை தடுக்கவில்லை என்றால் மரக்காணத்தில் ஏற்பட்டதை போன்று மீண்டும் நடைபெறும் என தமிழக உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த கடிதத்தின் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தால் 66 உயிர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போயிருக்காது. இதுபோன்ற உண்மைகள் மக்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக சவுக்கு மீடியா முடக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு முன்பாக தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் மீது பாஸ்போர்ட் வழக்கு குறித்து பத்திரிகையாளர் எழுதியதற்கு அவரை கைது செய்துள்ளனர். சவுக்கு மீடியாவில் பணியாற்றிய நபர்கள் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்படும் என மிரட்டி இருக்கிறார்கள். 

இது தனிநபருக்கு நடந்த கொடுமையாக பார்க்க கூடாது. ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்ட கொடுமையாக தான் பார்க்க வேண்டும். 5 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளி வந்திருக்கிறேன். எனது அலுவலகம் முடக்கப்பட்டு இருக்கிறது. ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனை நம்பி இருந்தோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 

ஏற்கனவே இருந்த வீரியத்தை போன்று மீண்டும் செயல்படுவேன். மக்களுக்கு எடுத்துரைக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் சவுக்கு மீடியா தயங்காது. தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது துளியும் இல்லை. தமிழக முதல்வராக இருந்த கலைஞர் தன்னை பத்திரிக்கையாளர் என கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டவர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சுதந்திரத்தையும் குரல்வலையை நெருக்குவதில் முன்னணியில் இருக்கிறார். தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் இல்லாமல் ஒரு அவல நிலை உள்ளது’’என்று கூறியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow