20 பேர் பலி.. 35 பேர் பாதிப்பு - வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி?

Chandipura Virus : தமிழ்நாட்டில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Jul 19, 2024 - 21:03
Jul 20, 2024 - 10:30
 0
20 பேர் பலி.. 35 பேர் பாதிப்பு - வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி?
வட மாநிலங்களில் சண்டிப்புரா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது

Chandipura Virus : குஜராத்தில் சபர்கந்தா மாவட்டத்தில் இந்த மாதம் பரவத் தொடங்கிய சண்டிப்பூரா வைரஸுக்கு இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களில் குழந்தைகளே பெருமளவில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் காய்ச்சல் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பரவி வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும், ராஜஸ்தான் மாநிலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டங்கர்பூர் மாவட்டத்தில் பலருக்கு இந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மாநில சுகாதாரத் துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணல் ஈக்கள், உண்ணி மற்றும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வலிப்பு அறிகுறியுடன் இறுதியாக கோமா வரை சென்று உயிரிழக்கும் வாய்ப்பும் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதீத காய்ச்சலால் 72 மணி நேரத்திற்குள் மரணத்தை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிப்பை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அதாவது, தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு உள்ளதா? என்பதை மாவட்ட சுகாதார அதிகாரிகள் கண்டறிந்து, அதுபற்றி அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள் மூலம் தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களிடையே விழுப்புணர்வை ஏற்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல, பொது மக்களும் தங்களை பூச்சி கடியில் இருந்து பாதுகாக்கும் விதமான ஆடைகளை அணிவதுதோடு, காலனியின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை சுற்றி சுமார் 45 மீட்டர் சுற்றளவில் புல், பூண்டுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய இந்தியாவில் 2003 மற்றும் 2004ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற வைரஸ் பரவியது. அந்த நேரத்தில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொற்று காரணமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow