கடல் ஆமைகள் உயிரிழப்பு.. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..?  பசுமை தீர்ப்பாயம் கேள்வி

ஆமைகள் உயிரிழப்பிற்குக் காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தியதாக எத்தனை மீன்பிடி கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 

Jan 28, 2025 - 15:59
 0
கடல் ஆமைகள் உயிரிழப்பு.. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..?  பசுமை தீர்ப்பாயம் கேள்வி
கோப்பு படம்

சென்னை மெரினா  முதல் கோவளம் வரை கடற்கரைப் பகுதிகளில் அதிகளவில்  கடல் ஆமைகள்  இறந்து கரை ஒதுக்கிய விவகாரத்தை தென் மண்டல பசுமை தீர்ப்பாய  உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா நிபுணத்துவ உறுப்பினர்  சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்குவதற்கு என்ன காரணம் என கண்டறியப்பட்டதா? ஆமைகள் உயிர் இழப்பை தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை  எடுத்துள்ளது என தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர் சண்முகநாதன், இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் கடல் ஆமைகள் இனபெருக்கம் செய்யும் காலங்களில் இந்திய கடலோர காவல்படை, மீன்வளத்துறை, வனத்துறை, கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட அமலாக்கப்பிரிவு மற்றும் தமிழ்நாடு கடலோர காவல்படை போன்ற துறைகள் ஒருங்கிணைந்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர்  தலைமையில் சிறப்புக்குழு (Task Force) அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

இக்குழு நேற்றைய தினம் கூட்டம் நடத்தியுள்ளதாகவும், இந்திய கடலோர காவல்படை, மீன்வளத்துறை, வனத்துறை, கடல்சார் அமலாக்கப்பிரிவு மற்றும் தமிழ்நாடு கடலோர காவல்படை போன்ற துறைகளின் அலுவலர்கள் அடங்கிய கூட்டு ரோந்துக் குழு கடல் பகுதிகளில் மீன்பிடி படகுகள் மற்றும்  கப்பல்களின் நடமாட்டத்தில் விதிமீறல் உள்ளதா என கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகள், வனத்துறை மற்றும் மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் (AIWC), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியில் பல்கலைக்கழகம் (TANUVAS) போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆமை இறப்பு தொடர்பாக தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், அதைத் தடுக்க உரியதொடர் திறன்மேம்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன் தெரிவித்தார்.

இதைக் கேட்ட தீர்ப்பாயம், ஆமைகள் உயிரிழப்புக்கு காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்திய கப்பல்களை அரசு கண்டறிந்ததா? எத்தனை மீன்பிடிக் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசுக்குப் கேள்வி எழுப்பியது. அதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மீன்பிடிக்கும்போது உரிய வழிமுறைகளை கடைப்பிடிக்காத மீன்பிடி கப்பல்கள்,  படகுகளுக்கு  அரசு வழங்கும் டீசல் மானியம் மற்றும் பிற படிகள், நலத்திட்டங்கள் வழங்கப்பட மாட்டாது என அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதுசம்பந்தமாக ஜனவரி 31-ஆம் தேதி விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தமிழக அரசு வழக்கறிஞர் பதில் அளித்தார். இதை பதிவு செய்த தீர்ப்பாயம், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow