மோசடி வழக்கில் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jan 21, 2025 - 11:40
Jan 21, 2025 - 12:50
 0
மோசடி வழக்கில் பதிலளிக்க  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு..!
மோசடி வழக்கில் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, புகார்தாரரான முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், வேலைக்காக பணம் கொடுத்தவர்களை அழைத்து, 70 லட்சம் வரை திருப்பிக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்கு மூலத்தை மாற்றிச் சொல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

பணத்தை திருப்பிக் கொடுத்தது, சாட்சிகளை மிரட்டியது தொடர்பாக ஆதாரங்களுடன், மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார் அளித்ததாகவும், அதில் மேல் விசாரணை நடத்த கேட்டுக் கொண்டதாகவும் நல்லதம்பி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மாவட்ட குற்றப்பிரிவிடம் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால், அதனை பரிசீலித்து, மேல் விசாரணை நடத்தி, விரைந்து இறுதி  அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை  எதிர்மனுதாரராக சேர்த்து மனுதாரர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow