தீ பரவியதாக வதந்தி.. ரயில் விபத்தில் 13 பேர் பலி.. ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
மகராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மும்பை நோக்கி புஷ்பக் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. மாலை ஐந்து மணியளவில் மகராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பச்சோரா என்ற இடத்தை ரயில் வந்தடைந்த நிலையில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் அச்சமடைந்த பயணிகள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
இதையடுத்து பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி அருகில் உள்ள தண்டவாளம் வழியாக ஓடியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த தண்டவாளம் வழியாக வந்த கர்நாடக விரைவு ரயில் பயணிகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அபாய சங்கிலியை இழுத்ததால் ரயில் திடீரென நிறுத்தப்பட்டது என்றும் அப்போது தண்டவாளத்தில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீப்பொறி பறந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீப்பொறியை பார்த்து அச்சமடைந்த பயணிகள் பலர் ரயிலில் இருந்து கீழே குதித்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: கொல்கத்தா வழக்கு.. சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜல்கானில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, ரயில்வே தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மாநில அரசு சார்பில் நிவாரணமா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தோருக்கான சிகிச்சை செலவையும் மாநில அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?