இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள்... மீட்க வலியுறுத்தி குடும்பத்தினர் சாலை மறியல்..!
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒருங்கிணைந்து செவ்வாய்கிழமை பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை தமிழக மீனவர்களின் 66 படகுகளை சிறைப்பிடித்து, 497 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் மீனவர்கள் மீது, மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட 90 மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டு காலம் வரையிலும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு இலங்கை சிறைகளில் தண்டனை கைதிகளாக உள்ளனர்.
கடந்த சனிக்கிழமை, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 23 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
இதனைக்கண்டித்து, ராமேசுவரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவப் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி நவம்பர் 12- ஆம் தேதி பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இந்த போராட்ட அறிவிப்புக்கு நாட்டுப்படகு மீனவ அமைப்புகளும் ஆதரவு அளித்தனர். முன்னதாக நேற்று ராமேசுவரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மீனவப் பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் நடத்திய அமைதிக்குழு கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் மீனவர்கள் அறிவித்தபடியே இன்று காலை 9.30 மணியளவில் பாம்பன் சாலைப் பாலம் துவங்கும் இடத்தில் மறியல் போராட்டம் துவங்கியது. இந்த சாலை மறியல் போராட்டத்தினால் ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. போராட்டத்தின் போது, போலீசாருக்கும் மீனவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பின்னர் வாக்குவாதமாக மாறியது.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பாம்பன் சாலை பாலத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்திய மீனவர்களால் அங்கு, போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில்,போராட்ட களத்தில் இருந்து வெளியேறிய மீனவ பெண்கள், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் மீட்க வேண்டும் என்று பாம்பன் கடலில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தனர். அவர்களை துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய போலீசார் சமாதானம் செய்தனர். இதனால் அப்பகுதி மீண்டும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதனை அடுத்து சிறு சிறு குழுவாக பாம்பன் சாலை பாலத்தில் இருந்து மீனவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்களும், பெண்களும் கொண்டனர்.
What's Your Reaction?






