CM Stalin : உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி.. ஏமாற்றம் இருக்காது..முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்!
CM Stalin About Udhayanidhi Stalin as Deputy CM : அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூறி நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
CM Stalin About Udhayanidhi Stalin as Deputy CM : சென்னை கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக ஜி.கே.எம் காலனியில் ஜம்புலிங்கம் பிரதான சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணியினை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் புதியதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கொளத்தூர் என்பது எனது சொந்த தொகுதி; நினைத்த நேரத்தில் இங்கு வருவேன்,”என்றார். அப்போது அமெரிக்க பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர், “அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என்பது குறித்து நன்றாகவே தெரியும். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவான அறிக்கை கொடுத்துள்ளார். அதுவே வெள்ளை அறிக்கை தான் என்றார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, அமைச்சரவை மாற்றம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களை அழைத்து பேசியுள்ளார். 2 நாட்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் நானும் பேச உள்ளேன் என்றார்.
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று பல மாதங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, பாவேந்தர் விருது உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,"உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உங்களை பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக் கொண்டதைப் போல நாங்களும் உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்" என பேசினார்.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் திமுகவில் எழுந்துள்ளது.கடந்த வாரம் அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் எம்.பிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அன்றைய தினமே அமைச்சரவை மாற்றம், துணை முதலமைச்சர் விவகாரம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.ஆனால் தற்போது வரையில் அமைச்சரவை மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இந்த சூழ்நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று பதில் கூறியுள்ளார். முதல்வரின் பதில் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு குட்நியூஸ் ஆக அமைந்துள்ளது.
What's Your Reaction?