ஸ்டாலின் திருமாவளவனின் டிராமா.... வாரிசுக்கு பதவி உயர்வு... எல்.முருகன் சாடல்!

L Murugan Criticized Udhayanidhi Stalin : முதலமைச்சர் அமெரிக்க பயணத்தில் பெரிதளவு முதலீடுகளை ஈர்க்காததை மக்களிடமிருந்து திசை திருப்பத்தான் மது ஒழிப்பு மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Sep 28, 2024 - 15:06
Sep 28, 2024 - 15:22
 0
ஸ்டாலின் திருமாவளவனின் டிராமா.... வாரிசுக்கு பதவி உயர்வு... எல்.முருகன் சாடல்!
வாரிசுக்கு பதவி உயர்வு... எல்.முருகன் சாடல்

L Murugan Criticized Udhayanidhi Stalin : சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு குறித்து பேசினார். அதில், “தமிழக முதலமைச்சர் பிரதமரை சந்தித்து பல்வேறு விஷயங்களை பேசி உள்ளார். சந்திப்பின் அடுத்த கட்டமாக ஒவ்வொரு துறைக்கும் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து சொல்வார்கள். மெட்ரோ பணிகளுக்கான நிதியை பொருத்தவரை ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முறை தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாடு அரசாங்கம் பணிகளை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சொல்லி உள்ளனர்" என்றார்.

இதையடுத்து அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க உள்ளதாக வரும் தகவல் குறித்து அவர், “உதயநிதி துணை முதலமைச்சராக வருவதால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேறமும் ஏற்பட போவதில்லை. தமிழ்நாட்டை மது இல்லாத மாநிலமாக மாற்றப்போவதில்லை. அவர்கள் வந்த பிறகுதான், தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. தமிழ்நாடு அரசின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் அவர்கள் குடும்பத்தில் வாரிசுக்கு மீண்டும் பதவி உயர்வு கிடைக்கும். குற்றவாளிகளை கைது செய்தால் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். சட்டத்தின் மாண்பு எதற்கு உள்ளது. துப்பாக்கியால் சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாது. 

இந்தியா ஜனநாயக நாடு. ஒவ்வொன்றுக்கும் வரையறை உள்ளது. தற்காப்பு என்றால் அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்ற கேள்வியை நான் கேட்கவில்லை, மக்கள் கேட்கிறார்கள். எந்த குற்றவாளியாக இருந்தாலும் நீதிமன்றம் தான் தண்டனை கொடுக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்திற்கு முன் நிறுத்துங்கள். சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாநிலம், அரசியலமைப்பு சட்டம், நீதிமன்றம் எல்லாம் உள்ளது. அதன் மூலம் தான் தண்டனை கொடுக்க முடியும்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் மட்டும் தான் வெளியில் வந்துள்ளார், நீதிமன்றம் நிரபராதி என்று சொல்லவில்லை. அடுத்தக் கட்டமாக வழக்கு நடைபெறும்போது தான் முடிவு தெரிய வரும். ஏற்கனவே குஜராத், பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்தி உள்ளோம். வட இந்தியாவில் 3 மாநிலங்களில் மது விலக்கு உள்ளது. தமிழ்நாட்டில் மது விலக்கு வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை. அதை தமிழக அரசு செய்யமாட்டார்கள். ஏனென்றால், பல இடங்களில் மது விற்பனை செய்வதே திமுகவினர்தான். பீகார், குஜராத் போன்ற மாநிலங்களே மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கும் பொழுது தமிழ்நாடு அரசு ஏன் அதை செய்ய முடியாது.

மேலும் படிக்க: முதல் நாள் வசூலில் கெத்து காட்டிய தேவரா... பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ஜூனியர் என்டிஆர்

மது ஒழிப்பு மாநாடு என்பது ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து நடத்தும் டிராமா. அமெரிக்காவுக்கு தமிழக முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க சென்றார். அதில் பெருமளவு முதலீடு ஈர்க்க முடியவில்லை. அதை மக்களிடமிருந்து திசைதிருப்ப இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து அவர் திரும்ப இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த டிராமா தொடங்கப்பட்டது. அதன் முடிவு அக்டோபர் இரண்டாம் தேதி தெரியும். திமுக வந்த பின்தான் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow