திருப்பதி லட்டு பிரசாதத்தில் புகையிலையா? வதந்தி பரப்பாதீர்கள்.. திருமலை தேவஸ்தானம் கோரிக்கை
Tobacco Pouch in Sri Vari Laddu Prasadam : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் புகையிலை இருந்ததாக தெலங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.இதனை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது.
Tobacco Pouch in Sri Vari Laddu Prasadam : ஸ்ரீவாரி லட்டுப் பிரசாதத்தில் புகையிலைப் பை இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது. புனிதமான ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தில் புகையிலை பாக்கெட் இருந்ததாக சில பக்தர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது பொருத்தமற்றது என்றும் தெரிவித்துள்ளது.
திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது கலப்பட நெய் சேர்க்கப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு போன்றவை கலப்பட்டம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆய்வு முடிவில் வந்த ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார். இது தேசிய அளவில் அதிர்வலைகளை எழுப்பியது.
இந்நிலையில், இந்த விவகாரம் அடங்குவதற்குள் திருப்பதி லட்டில் புகையிலை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கம்மம் மாவட்டம் - கார்த்திகேயா டவுன்ஷிப்பை சேர்ந்த பத்மாவதி, கடந்த 19ஆம் தேதி திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார். வீடு திரும்பும் போது லட்டு பிரசாதம் வாங்கி வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் அக்கம் பக்கத்தினருக்கு லட்டு கொடுக்க முடிவு செய்துள்ளார். அப்போது அதில் வித்தியாசமான வாசம் வந்துள்ளது. தொடர்ந்து அதை உடைத்து பார்த்த போது லட்டுக்குள் புகையிலை காகிதத்தில் வைத்து சுற்றி இருப்பதை கவனித்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பிய நிலையில்,இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளது. TTD தேவஸ்தானம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஸ்ரீவாரி லட்டுப் பிரசாதத்தில் புகையிலைப் பை இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை புனிதமான ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தில் புகையிலை பாக்கெட் இருந்ததாக சில பக்தர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது பொருத்தமற்றது. திருமலையில், ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களால் மிகுந்த பக்தியுடனும், ஒழுக்கத்துடனும், பாரம்பரிய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தும் லட்டுகள் தினமும் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த லட்டுகள் தயாரிப்பது 360 டிகிரி சிசிடிவி கண்காணிப்பு மூலம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் புனிதமான இந்த தயாரிப்பு செயல்பாட்டில் புகையிலை இருப்பதைப் பற்றி இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவது துரதிர்ஷ்டவசமானது.இதனை பக்தர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."போலி செய்திகள் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என பதிவிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?