இந்தியா

பீகார் சட்டப்பேரவையில் சலசலப்பு: பாஜக அமைச்சரை விமர்சித்த பாஜக இளம் எம்எல்ஏ!

பீகார் சட்டப்பேரவையில் தனது கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பதிலில் திருப்தியில்லை என்று பாஜக எம்எல்ஏவும் பாடகியுமான மைதிலி தாகூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் சட்டப்பேரவையில் சலசலப்பு: பாஜக அமைச்சரை விமர்சித்த பாஜக இளம் எம்எல்ஏ!
Young BJP MLA criticizes BJP minister
பீகார் சட்டப்பேரவையின் மிக இளம் வயது எம்எல்ஏ-வான மைதிலி தாகூர், தனது தொகுதியின் சுகாதார நிலை குறித்து எழுப்பிய கேள்விக்குக் கிடைத்த பதில் திருப்திகரமாக இல்லை என்று கூறி அதிரடி காட்டியுள்ளார். பாஜக-வைச் சேர்ந்த இவர், அதே கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் பதிலை விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை விவகாரமும் அமைச்சரின் பதிலும்

அலிநகர் தொகுதிக்குட்பட்ட குராசன் நதியாம் அரசு மருத்துவமனையின் கட்டடம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அது நோயாளிகளுக்குப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் மைதிலி தாகூர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே, "கட்டடம் மோசமான நிலையில் இல்லை, சிறு பழுதுபார்ப்புப் பணிகள் மட்டுமே தேவை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

நிதர்சனம் வேறு; ஆவணங்கள் வேறு!

அமைச்சரின் இந்தப் பதிலைத் திட்டவட்டமாக மறுத்துப் பேசிய மைதிலி தாகூர், "நான் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறேன். கட்டடம் முற்றிலும் பாழடைந்துள்ளது. ஒட்டுமொத்த மருத்துவமனையும் ஒரே ஒரு சிறிய அறையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வ பதிவுகளில் எல்லாம் நன்றாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மை நிலை அதற்கு முற்றிலும் மாறாக உள்ளது" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். அமைச்சரின் பதிலில் தனக்கு எள்ளளவும் திருப்தியில்லை என்றும் அவர் சபையில் குறிப்பிட்டார்.

மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்த வேதனை

கட்டடப் பிரச்சினை மட்டுமின்றி, அந்த மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "முன்பு இரண்டு எம்பிபிஎஸ் மருத்துவர்கள் இருந்த இடத்தில், தற்போது வெறும் பயிற்சி மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். சுமார் 50,000 மக்களுக்குச் சேவை செய்யும் இந்தப் பகுதிக்கு உடனடியாக இரண்டு நிரந்தர மருத்துவர்களை நியமிக்க வேண்டும். முறையான வசதிகள் செய்யப்பட்டால், இந்தப் பகுதி மக்களுக்கு இது ஒரு முக்கியமான வரப்பிரசாதமாக அமையும்" என்று அவர் தெரிவித்தார்.

25 வயதான மைதிலி தாகூர், பாடகியாக இருந்து அரசியலுக்கு வந்து, அலிநகர் தொகுதியில் வெற்றி பெற்றவர். கட்சியின் கட்டுப்பாட்டை விடத் தொகுதியின் நலனே முக்கியம் என அவர் காட்டிய இந்தத் துணிச்சல், பீகார் அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.