இந்தியா

ரகசியங்கள் கசிவு: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது!

இந்திய விமானப்படை பணியாற்றி வந்த சிவில் ஊழியர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களைக் கசிப்பிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரகசியங்கள் கசிவு: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது!
Indian Air Force soldier arrested for spying for Pakistan
இந்திய விமானப்படை பணியாற்றி வந்த சிவில் ஊழியர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களைக் கசிப்பிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலப் புலனாய்வுத் துறை நடத்திய அதிரடி விசாரணையில் இந்த உளவு நெட்வொர்க் அம்பலமாகியுள்ளது.

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள சாபுவா விமானப்படை நிலையத்தில் 'மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்' (MTS) ஆகப் பணியாற்றி வந்த சுமித் குமார் (36) என்பவரே இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தனது பதவியைப் பயன்படுத்தி இந்திய விமானப்படையின் ரகசியத் தகவல்களைச் சேகரித்து, சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாகிஸ்தான் கையாட்களுக்குத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணையும் கைது நடவடிக்கையும்

கடந்த ஜனவரி மாதம் ஜெய்சால்மரைச் சேர்ந்த ஜபரா ராம் என்பவர் பிடிபட்டபோது, அவரிடம் நடத்திய விசாரணையில் சுமித் குமார் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் விமானப்படை புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில், சுமித் குமார் சாபுவாவில் வைத்துப் பிடிக்கப்பட்டார். அவர் 2023-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவு அமைப்போடு தொடர்பில் இருந்ததும், இதற்காகப் பணம் பெற்றுக்கொண்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கசிந்த ராணுவத் தகவல்கள்

சுமித் குமார், சாபுவா மற்றும் பிகானேரில் உள்ள நால் (Nal) விமானப்படை நிலையங்களின் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் அங்கு பணியாற்றும் அதிகாரிகள் குறித்த ரகசிய விவரங்களை அவர் கசியவிட்டுள்ளார். மேலும், தனது பெயரில் பெறப்பட்ட மொபைல் எண்களைக் கொண்டு பாகிஸ்தான் உளவு அமைப்பினர் சமூக வலைதளக் கணக்குகளைத் தொடங்கவும் அவர் உதவியுள்ளார்.

சட்ட நடவடிக்கை

அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் (Official Secrets Act, 1923) மற்றும் பிஎன்எஸ் சட்டம் (BNS Act, 2023) ஆகியவற்றின் கீழ் மார்ச் 22 அன்று சுமித் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் உள்ள மிகப்பெரிய உளவு நெட்வொர்க்கைக் கண்டறியப் புலனாய்வுத் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.