அமைச்சரவையில் மாற்றம்.. மக்களுக்கு ஏமாற்றம்.. வானதி சீனிவாசன் கொடுத்த பஞ்ச்
தமிழக அமைச்சரவையில் மாற்றம், அமைச்சர்களுக்கு இருக்கலாம். ஆனால் அது ஏமாற்றமாக பொதுமக்களுக்கு தான் இருக்கும் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பை தாராளமாக மாநில அரசு நடத்தலாம். ஆனால் மத்திய அரசை குறை சொல்கிறார்கள்.மத்திய கல்விக் கொள்கையை மட்டும் மாநில அரசின் கீழ் செயல்படுத்த வேண்டும் என்று திமுக கூறுவது எந்தவிதத்தில் நியாயம் இல்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழ உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சு அடிபடுகிறது. அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தரப்போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆடி முடிந்து ஆவணியில் துணை முதல்வர் பதவி என்று சொன்னார்கள் இப்போது புரட்டாசி முடிந்து ஐப்பசியில் துணை முதல்வர் பதவி உறுதி என்கிறார்கள். இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து கூறி வருகிறார்கள்.
கோவை, ராமநாதபுரம் பகுதியில் இன்று பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. கோவை தெற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு,அடையாள அட்டையை வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன்,பிரதமர் மோடி பாஜகவில் இணையுமாறு வலியுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் இதுவரை நான்கு கோடி உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்தது உள்ளனர் என்றார்.
தொகுதியில் ஒவ்வொரு நிர்வாகிகளுக்கு பூத் ஒதுக்கப்பட்டு, அதில் உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருவதாகவும்,வீடு வீடாக சென்று உறுப்பினர்கள் சேர்த்து வருவதாகவும், கட்சியில் அதிக அளவில் பெண்கள் சேர்ந்திருப்பது மிகவும் உற்சாகத்தை அளிப்பதாகவும் வரக்கூடிய நாட்களில் கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பது தீவிரமாக நடைபெறும் என்றார்.முதன் முதலில் தொழில்நுட்ப அரசியல் கட்சியாக செயல்படுவது பாஜக தான் என்று தெரிவித்தார்.
GST தொடர்பாக குழு அமைக்கப்பட்டு ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும், அதற்கு விரைவில் மத்திய அரசு அறிவிப்பு வரும் என கூறினார்.மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து தான் ஜிஎஸ்டி குறித்து முடிவு எடுக்கிறார்கள்.இது தொடர்பாக மாநில நிதி அமைச்சரை சந்தித்துள்ளதாக கூறினார். விவசாயம் மற்றும் கோவை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
ரேஷன் கார்ட்டில் போலியாக நபர்கள் சேர்ப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.அது ஏழைகளுக்காக வழங்கப்படும் கார்டு என்றும், மாநில அரசு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம் ஆனால் ஏமாற்றம் பொதுமக்களுக்கு தான் மிஞ்சும் என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பை தாராளமாக மாநில அரசு நடத்தலாம். ஆனால் மத்திய அரசை குறை சொல்கிறார்கள்.மத்திய கல்விக் கொள்கையை மட்டும் மாநில அரசின் கீழ் செயல்படுத்த வேண்டும் என்று திமுக கூறுவது எந்தவிதத்தில் நியாயம் இல்லை.பெண்களுக்கு எதிராக பட்டியலின மக்களுக்கு எதிராக வன்கொடுமைகளில் திமுக அரசு கண்டும் காணாமல் கடந்து செல்கிறது.ஆனால் சமூக வலைதளங்களில் ஏதாவது பதிவு போட்டால் அவர்களை உடனடியாக கைது செய்கிறார்கள்.
மத்திய அரசு கொடுக்கின்ற நிதிகளை மாநில அரசு திருப்பி அனுப்புகிறது.ஆனால் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று தொடர்ச்சியாக திமுக அரசு கோரிக்கை வைத்து வருகிறது.நொய்யல் ஆற்றில் நேரடியாக மனித கழிவுகள் கலந்து கொண்டிருக்கிறது.இந்த மாதிரியான விஷயங்களை மனித கழிவு கலக்கும் இடங்களில் மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
What's Your Reaction?