பிள்ளையாரை தாங்கும் சின்ன எலி.. விநாயகருக்கு மூஷிக வாகனம் வந்தது எப்படி.. புராண கதை

பிள்ளையார் எல்லோருக்கும் பிடித்தமான கடவுள். சின்னப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விநாயகரை வணங்குவார்கள். மூஞ்சூறு எப்படி பிள்ளையாரின் வாகனமாக வந்தது என்பது பற்றி புராண கதை உள்ளது.

Sep 7, 2024 - 14:50
 0
பிள்ளையாரை தாங்கும் சின்ன எலி..  விநாயகருக்கு மூஷிக வாகனம் வந்தது எப்படி.. புராண கதை
vinayagar chaturthi 2024

பிள்ளையார் எல்லோருக்கும் பிடித்தமான கடவுள்.  சின்னப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள்  வரை விநாயகரை வணங்குவார்கள்.  மூஞ்சூறு எப்படி பிள்ளையாரின் வாகனமாக வந்தது என்பது பற்றி புராண கதை உள்ளது.

மதுரை: முழு முதற் கடவுளாக விளங்கும் விநாயகருக்கு இன்றைக்கு சதூர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி ஏன் வந்தது என்பது பற்றியும் அவரது படைப்பு பற்றியும் புராண கதைகள் உள்ளன. கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ததால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்றும் விநாயகர் புராணம் சொல்கிறது. 

விநாயகர் சதுர்த்தி:

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுவதால் இன்றைய தினம் வீடுகளில் மாவிலை தோரணங்களால் அலங்கரித்து விநாயகருக்கும் அலங்காரம் செய்து அவருக்கு அவல் பொரி, பழங்கள், மோதகம், கொழுக்கட்டை படையலிட்டு பலரது வீடுகளிலும் வணங்குகின்றனர். 'மூஷிக வாகன மோதக ஹஸ்த' என்று விநாயகரை போட்டி பாடுகின்றனர்.

தேவர்களும் கடவுளர்களும் தங்களுக்கு என்று ஒரு வாகனத்தை வைத்திருப்பார்கள். முருகன் மயிலையும், சிவன் காளையையும், பெருமாள் கருடனையும், சக்தி சிங்கத்தையும் வாகனமாக வைத்திருக்க விநாயகர் மட்டும் குட்டியான மூஞ்சூறுவை வாகனமாக தேர்வு செய்தது ஏன் என்று பலரும் யோசிக்கலாம். பிள்ளையாருக்கு மூஞ்சூறு வாகனமானது பற்றியும் புராண கதை உள்ளது விநாயகர் சதுர்த்தி நாளில் அந்த சுவாரஸ்யமான தகவலைப் பார்க்கலாம்.

விநாயகர் புராணம்: 

யானை முகமும், தலையில் இரு கொம்புகளும் உடைய கஜமுகாசுரன் என்ற அசுரன், அசுர குல குருவாகிய சுக்கிராச்சாரியாரின் போதனைப்படி, சிவபெருமானின் திருநாமத்தை சொல்லிக்கொண்டே பல ஆண்டுகள் காலம் கடுமையான தவம் இருந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான், அவன்முன் தோன்றி, என்ன வரம் என்று கேட்டார். எந்த ஆயுதத்தாலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது. வஞ்சக எதிரிகளின் சூழ்ச்சியால் எனக்கு மரணம் நேரிட்டாலும், எனக்கு இன்னொரு பிறவி கிடைக்கக் கூடாது " என்று வரம் கேட்டான், கஜமுகாசுரன். சிவபெருமான் உடனே அவன் கேட்ட வரங்களை அளித்துவிட்டு மறைந்தார்.

அசுரனின் அகங்காரம்: 

வரம் பெற்ற அசுரன் சும்மா இருப்பானா? மதங்கமாபுரம் என்னும் நகரத்தை உண்டாக்கி, அரசனாக ஆட்சி செய்தான். தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் அனைவரும் தன்னுடைய முன்னால் நின்று, தினமும் மூன்று வேளைகள் ஆயிரத்தெட்டு முறை தோப்புக்கரணம் போட வேண்டுமென்று கட்டளையிட்டான். அவர்கள் வரிசையாக நின்று, தோப்புக்கரணம் போட்டே அயர்ந்து விழுந்தார்கள். அதைப் பார்த்துக் அசுரன் அகங்காரத்துடன் சிரித்தான்.அரக்கனின் கொடுமைகளைப் பொறுக்க முடியாத தேவர்கள், பிள்ளையாரை வணங்கித் தம்மைக் காக்குமாறு வேண்டினார்கள்.

கஜமுகாசூர சம்ஹாரம்:

விநாயகரும், அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கஜமுகாசுரனுடன் போருக்குப் புறப்பட்டார். விநாயகப் பெருமானுக்கும், அசுரனுக்கும் இடையில் கடும் போர் மூண்டது. விநாயகர் தமது அம்புகளால் கஜமுகாசுரனின் படைகளையும், தேர், மற்றும் ஆயுதங்களையும் நொடியில் அழித்தார். ஆனால், அவரது ஆயுதங்களினால் அந்த அரக்கனைக் கொல்ல முடியவில்லை. எந்த ஆயுதத்தாலும் அசுரனை அழிக்க முடியலையே என்று விநாயகர் யோசித்த போது சிவபெருமான் தனது மகனுக்காக குரல் கொடுத்தார். மகனே, கஜமுகாசூரனை எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது. என்று சொல்லவே, சற்றும் யோசிக்காமல் தனது வலது தந்தத்தை ஒடித்து கஜமுகாசூரனை வதம் செய்தார். 
மூஞ்சூறு வாகனம்:

நிலைகுலைந்து வீழ்ந்த அரக்கன் மூஞ்சூறு போல மாறினான். அந்த மூஞ்சூறுவை தனது ஞானக்கண்ணால் பார்த்தார் பிள்ளையார். ஞானம் பெற்ற மூஞ்சூறு விநாயகரின் பாதங்களின் வீழ்ந்து வணங்கினான். அதனை தனது வாகனமாக்கிக் கொண்டார் விநாயகர். எலிகள் மிகவும் சிறியதாக இருப்பதாலும், அவற்றால் எந்த சிறு துளையிலும், இருள் சூழ்ந்த இடங்களிலும் நுழைய முடியும் என்பதாலும், விநாயகர் இருளை நீக்கவும், மூலை முடுக்கில் உள்ள தீய சக்திகளை அழிக்கவும் எளிதாக இருக்கும் என்பதற்காகவும் மூஞ்சூறுவை வாகனமாக பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.

விநாயகரின் வாகனங்கள்:

முத்கல பூர்ணா என்ற இந்து நூலில் விநாயகரின் 8 அவதாரங்களை கூறியிருப்பர். அதில், 5 அவதாரங்களில் விநாயகர், எலியையே வாகனமாக பயன்படுத்துவார். வக்ரதுண்டா என்ற அவதாரத்தில் சிங்கத்தையும், விகட அவதாரத்தில் மயிலையும், விக்னராஜா அவதாரத்தில் புனிதமான பாம்பையும் வாகனமாக பயன்படுத்துவார்.

அதேபோல், கணேஷ பூர்ணா என்ற இந்து நூலில், விநாயகர் எலி, சிங்கம், மயில் மற்றும் குதிரை ஆகியவற்றை வாகனங்களாக பயன்படுத்துவதாகவும், ஜெயின் மத நம்பிக்கைகளில் விநாயகர் எலி, யானை, ஆமை, ஆடு மற்றும் மயில் ஆகியவற்றை வாகனங்களாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow