TN Cabinet Reshuffle 2024 : தமிழக அமைச்சரவையில் மாற்றமா? பட்டென்று முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்
CM Stalin on Tamil Nadu Cabinet Reshuffle 2024 : தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனால் பதவி பறிபோகுமோ என்ற பயத்தில் இருந்த அமைச்சர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
CM Stalin on Tamil Nadu Cabinet Reshuffle 2024 : தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் முன்பாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. பழைய அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதிய அமைச்சர்கள் புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் அதனை மறுத்துள்ளார்.
சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 5.12 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும் பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையமாக (Multi Hazard Early Warning Centre) செயல்படுவதற்காக 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்க கூடிய அறிவிப்புகள் தொடர்பாக நேரடியாக கண்காணிப்பு செய்வதற்கும், மேலும் மாநிலம் முழுவதும் இருக்கக் கூடிய அணைகள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் கொள்ளளவு கண்காணிக்கப்படுகிறது. மேலும் அதீத கனமழை நேரத்தில் அணைகள் மற்றும் ஏரிகளில் இருந்து திறந்து விடும் உபரி நீர் உள்ளிட்டவை கண்காணிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரே மையத்தில் வருவாய்துறை, காவல்துறை, வேளாண்மை உள்ளிட்ட எட்டு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கும், கணினிகள், கூட்ட அரங்கு, காவல்துறை ஒய்வு இடம், உணவு கூடம் ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய்துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட துறை அதிகாரிகள் இருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் அமைச்சரவை மாற்றப்படுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு தகவல் இல்லை என்று கூறினார். மாநில அவசர காலத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறது. மக்களுக்கு பேருதவி வழங்க மையம் செயல்படும். தமிழகம் முழுவதும் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
நாணய வெளியீட்டு விழா மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதை மாநில அரசு நடத்தியது. அமெரிக்கா பயணத்தில் தொழில் முதலீட்டாளர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்க பயணம் முடிவுக்கு பின்னர் முதலீடுகள் தொடர்பாக தெரிவிக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் இன்று நடைபெறக் கூடும் என்ற தகவலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுத்துள்ளதால் அமைச்சர் பதவியை இழக்கக் கூடும் என கூறப்பட்ட மூத்த அமைச்சர் காந்தி மற்றும் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது. அதேநேரத்தில் அமைச்சர் பதவிக்காக கோவி செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?