அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டது ஏன்? வானதி சீனிவாசன் சொன்ன விளக்கம்!

தான் பேசியது சரியல்ல என்று புரிந்துகொண்டதால் அவரே முன்வந்து மன்னிப்பு கேட்டுள்ளார் என்று அன்னபூர்ணா உரிமையாளர் வீடியோ சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார் வானதி சீனிவாசன். நம் சமூகத்தில் பெண்கள் என்றால் யார் எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Sep 13, 2024 - 12:49
Sep 13, 2024 - 14:37
 0
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டது ஏன்? வானதி சீனிவாசன் சொன்ன விளக்கம்!
vanathi srinivasan

கோவையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசிய வீடியோ வைரலான நிலையில், அன்னபூர்ணா குழும உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்ட வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது. இதுகுறித்து கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். 

கோவை கொடிசியா வளாகத்தில் புதன்கிழமையன்று தொழில் முனைவோர் உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், ஜிஎஸ்டியில் இருக்கும் பிரச்சினைகளை கோவையின் பிரபல தொழிலதிபர் அன்னபூர்ணா சீனிவாசன் சுட்டிக்காட்டி பேசினார்.

பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை ஆனால் பன்னுக்குள் வைக்கும் கிரீம், ஜாமுக்கு 18% ஜிஎஸ்டியா? என பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோ சர்ச்சையான நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், அவர் ஜனரஞ்சகமாக பேசியதால் அனைவரும் சிரித்தனர். இதுபோன்ற விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படுவதில்லை என பதிலளித்தார். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கோரியுள்ளார்.

அதாவது, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரை அன்னபூர்ணா சீனிவாசன் நேரில் சந்தித்தார். அப்போது "ஹோட்டல் அசோசியேசன் சார்பில் என்னை பேசச் சொன்னார்கள் நான் மீட்டிங்கிற்கு கூட வரவில்லை என்றுதான் சொன்னேன் ஆனால் பேச வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது.

நீங்க வயதில் பெரியவங்க, தயவுசெய்து மன்னித்து விடுங்கள் என இருக்கையிலிருந்து எழுத்து நின்று இரு கைகளையும் கூப்பி நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரினார். அப்போது, நான் எந்த பார்ட்டியிலும் இல்லை என நிதி அமைச்சரிடம் தெரிவித்த அவர், ஒரு தாழ்மையான வேண்டுகோள் எனக் கோரிக்கையினை தெரிவித்தார்.

தமிழகத்தில் சின்ன கடை, பெரிய கடை என அனைத்து ஓட்டல் கடைகளைச் சேர்ந்தவர்களையும் அழைத்து ஒரு மீட்டிங் போடுகிறோம். அதில், நீங்கள் வந்து கலந்து கொண்டீர்கள் என்றால் சந்தோஷமாக இருக்கும். எனது தந்தை சுதந்திரப் போராட்டத் தியாகியாக இருந்தவர். நான் உங்கள் மனதைப் புண்படுத்திவிட்டேன். இரவு முழுவதும் தூக்கமே இல்லை. வீடியோ தொடர்பாகக் காலையிலிருந்து நிறையப் பத்திரிகையாளர்கள் என்னை அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களை எல்லாம் தவிர்த்து விட்டேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து அவரிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள் நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் பற்றி நல்லதோ கெட்டதோ வெளியில் பேசக்கூடாது” என அறிவுரை வழங்கினார்.

மேலும், எடுத்த எடுப்பில் நீங்கள் உங்கள் எம்எல்ஏ-வை பற்றி ஜிலேபி சாப்பிடுறாங்க, சண்டை போடுறாங்க, ரெகுலராக வருவாங்க என சொன்னவுடன் எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை எனக்கூறிய அவர், நீங்கள் ஜிஎஸ்டி பற்றி என்ன கேட்டாலும் பதில் சொல்லி இருப்பேன் என தெரிவித்தார். அமைச்சர்கள் குழுவினர்தான் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று நேரில் பார்த்து ஜிஎஸ்டி குறித்து முடிவு செய்வார்கள் எனவும் அவருக்கு விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் கோவையின் பிரபல தொழிலதிபரான அன்னபூர்ணா சீனிவாசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சிகளை பாஜகவைச் சார்ந்த ஐடி விங் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் கட்சியினர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனிடம் இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.அவர்தான் காலையில் இருந்து அழைத்து, ‘நிதி அமைச்சர் செல்வதற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பலமுறை கேட்டார். அதனடிப்படையில் தான் சந்திப்பு நிகழ்ந்தது.தாமாக முன்வந்து கேட்கும்போது, அதை நாங்கள் எப்படி தவிர்க்க முடியும். யாரும் அவரை மிரட்டவில்லை என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். 

அப்போது நிதி அமைச்சர், ‘நீங்கள் ஜிஎஸ்டி குறித்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எம்எல்ஏ என்ன சாப்பிடுகிறார், எப்படி சாப்பிடுகிறார் என்றெல்லாம் பேசுவது தவறு’ என்று கூறினார்.தான் பேசியது சரியல்ல என்று புரிந்துகொண்டதால் அவரே முன்வந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
நம் சமூகத்தில் பெண்கள் என்றால் யார் எப்படி வேண்டுமானாலும்  கேள்வி கேட்கலாம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.இதே இடத்தில் ஆளுங்கட்சியின் ஆண் அமைச்சர் அல்லது அல்லது ஆண் எம்எல்ஏ இருந்திருந்தால் இதே பாணியில் பேசியிருப்பார்களா. சமுதாயத்தின் இந்த மனநிலையில் இருந்தும் நாங்கள் மீண்டு வர போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த இடத்தில் ஆண், பெண் பார்வை வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow