Orange Alert : திங்கட்கிழமை அதிகாலையில் பெய்த திடீர் மழை.. முதல்நாளே கச்சேரி ஆரம்பம் - ஆரஞ்ச் அலர்ட்
Orange Alert Issued in Chennai : திங்கட்கிழமை அதிகாலையில் பெய்த திடீர் மழையால் சென்னைவாசிகள் திடுக்கிட்டு விழித்தனர். இடி மின்னலோடு 1 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ள நீர் தேங்கியது.
Orange Alert Issued in Chennai : தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் கனமழை பெய்தது. கிண்டி, வேளச்சேரி, அடையாறு, சோழிங்கநல்லூர், தாம்பரம், அண்ணா சாலை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.16 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மாவட்டத்தை ஒட்டிய மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மலையால் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. அணைகள் நிரம்பியுள்ளதால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.
வட தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை பகலில் கடுமையான வெப்பமும் இரவில் திடீரென மழையும் பெய்து வருகிறது.நேற்று பகலில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்தது. இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசிய நிலையில் இன்று அதிகாலையில் மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திங்கட்கிழமை அதிகாலையில் இடி மின்னலோடு பெய்த மழையால் மக்கள் திடுக்கிட்டு கண் விழித்தனர். 6 மணி வரை கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று (ஆகஸ்ட் 12) தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகலிலும் மழைக்கான வாய்ப்புள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வருகிற 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் 40 கிலோ மீட்டர் வரையிலான பலத்த காற்றுடன் மிதமான மழையும், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
What's Your Reaction?