மாற்றுத்திறனாளிகள் பற்றி மகாவிஷ்ணு பேசிய சர்ச்சை வீடியோ.. யூடியூபில் இருந்து நீக்கம்
மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட உள்ள நிலையில் அந்த சர்ச்சைக்கு உண்டான வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி குறித்து இழிவாக மகாவிஷ்ணு பேசிய வீடியோ யூடியூபில் இருந்து நீக்கம். காவல்துறை கைது நடவடிக்கையை தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ் 2 மாணவர்களுக்கு தன்னம்பிக்கை குறித்து பேசுவதற்காக பரம்பொருள் அறக்கட்டளையை சேர்ந்த ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வரவழைக்கப்பட்டார்.அவரது பேச்சு பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மத்தியில் பேசிய மகாவிஷ்ணு போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் ஏழைகளாகவும் மாற்றுத்திறனாளிகளாகவும் கருப்பாகவும் பிறக்கிறார்கள் என சிறிதும் மனசாட்சியே இல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படுமே என்றும் யோசிக்காமல் மூடநம்பிக்கை கருத்தை மாணவர்களிடம் திணிக்க முயற்சித்தார். அப்போது இதை அங்கிருந்த கண் பார்வையற்ற ஆசிரியர் சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது மகாவிஷ்ணு, அவரையும் அவமானப்படுத்தினார். "நீங்கள் என்ன முதன்மை கல்வி அலுவலரை விட அறிவானரா" என கேட்டு மட்டம் தட்டி பேசினார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது அறக்கட்டளைக்கு சென்று காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர் தலைமறைவானதாக செய்திகள் பரவின.
இதனையடுத்து மகாவிஷ்ணு, ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்டார். அதில் அவர் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என பேசினார். தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல சங்க தலைவர் தங்கம் என்பவர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்திலும், மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்கம் சங்கத் தலைவர் சரவணன் என்பவர் திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் வில்சன், டிசம்பர் 3 அமைப்பின் மாநில தலைவர் தீபக் ஆகியோரும் புகார் அளித்துள்ளனர்.இதனையடுத்து நேற்று (செப்டம்பர் 8) சென்னை திரும்பிய மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப்டம்பர் 20ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,மகாவிஷ்ணு தனது பரம்பொருள் பவுண்டேஷன் என்ற youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம், மாற்றுத்திறனாளி குறித்து இழிவாக பேசியது தொடர்பான வீடியோ தற்போது அந்த வீடியோ யூடியூப்பில் இருந்து நீக்கப் பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய சர்ச்சைக்கு உண்டான வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் தற்போது வீடியோ யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மகாவிஷ்ணு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு எவ்வளவு பணம் வாங்கினார் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பள்ளிகள் மற்றும் பல்வேறு இடங்களில் மகாவிஷ்ணு சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகள் மற்றும் மற்ற இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு பணம் பெற்றுக் கொண்டு நிகழ்ச்சியை நடத்தினார் எனவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?