”ஒன்று விந்து, இரண்டு கண்ணீர்.. வாழை ஒரு ஆபாச படம்..” மாரி செல்வராஜ்ஜை விமர்சித்த சாரு நிவேதிதா!

Famous Tamil Writer Charu Nivedita Criticized Mari Selvaraj Vaazhai Movie : மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம், கடந்த மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், எழுத்தாளர் சாரு நிவேதிதா மிக காட்டமாக விமர்சித்துள்ளார்.

Sep 9, 2024 - 09:31
Sep 9, 2024 - 18:23
 0
”ஒன்று விந்து, இரண்டு கண்ணீர்.. வாழை ஒரு ஆபாச படம்..” மாரி செல்வராஜ்ஜை விமர்சித்த சாரு நிவேதிதா!
வாழை படத்தை விமர்சித்த சாரு நிவேதிதா

Famous Tamil Writer Charu Nivedita Criticized Mari Selvaraj Vaazhai Movie : பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தொடர்ந்து கர்ணன், மாமன்னன் படங்களையும் இயக்கிய மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக வலம் வருகிறார். இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான வாழை திரைப்படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை, எழுத்தாளர் சாரு நிவேதிதா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது வலைதளத்தில் எழுதியுள்ள அவர், வாழை திரைப்படம் விந்து, தண்ணீர் என்ற இந்த இரண்டு திரவங்களை குறிவைத்து வெற்றியடைந்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது, தாய்லாந்திலும் மற்ற செக்ஸ் டூரிஸ தேசங்களிலும் லைவ் ஷோ என்ற பிரபலமான காட்சி உண்டு.  ஒரு பெரிய அறையின் நடுவே வட்ட வடிவத்தில் ஒரு மேடை இருக்கும்.  அதில் கண்ணைக் கூசும் வெளிச்சத்தில் ஒரு ஆணும் பெண்ணும் உடலில் எந்த வஸ்திரமும் இன்றி உடலுறவு கொள்வார்கள். அறையைச் சுற்றி அமர்ந்திருக்கும் ஆண்களும் பெண்களும் அந்தக் காட்சியைக் கண்டுகளிப்பார்கள். கூட்டத்தில் ஆண்களுக்கு நிகராகவே பெண்களும் இருப்பார்கள் என இதனை குறிப்பிட்டு வாழை படத்தை விமர்சித்துள்ளார் சாரு. 

அதன்படி, வாழை படத்தில் வரும் பூங்கொடி டீச்சர், அவரது மாணவனாக சிவனைந்தன் வரும் காட்சிகள் அனைத்தும் தாய்லாந்தின் லைவ் ஷோவின் soft version ஆக எடுக்கப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். அங்கே நேரடியாக நடக்கும் எனவும், இங்கே மறைமுகமாக நடக்கிறதாகவும் கூறியுள்ள அவர், அப்படி எதுவும் இல்லை என்பதான பாசாங்குதான் இந்தப் படத்தை சமூக விரோதமான படைப்பாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது ஏன் என விளக்கம் கொடுத்துள்ள அவர், படத்தில் காட்டப்பட்டுள்ளது பச்சைப் பொய் என்றும், சிவனைந்தன் எட்டாம் வகுப்பு மாணவன் வயது பதிமூன்று, பூங்கொடி டீச்சருக்கு 22 வயது இருக்கலாம். பூங்கொடி ஒரு காட்சியில் பாவாடை தாவணியோடு வருகிறார். 

டீச்சரும் சிவனைந்தனும் வரும் காட்சிகள் அனைத்திலுமே பாலியல் சமிக்ஞைகள் படு தீவிரமாக உணர்த்தப்படுகின்றன. அது புரியாத அசடுகளுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெள்ளத்தெளிவாக தன் இசையின் மூலம் அந்தப் பாலியல் சமிக்ஞைகளைப் புரிய வைத்து விடுகிறார்.  இயக்குநர் சூசகமாகச் சொல்ல நினைப்பதை இசையமைப்பாளர் நம் கண் முன்னே தூலமாக எடுத்துக் காண்பித்துவிடுகிறார். நம் செவிகள் கேட்பதை கண்கள் புரிந்துகொள்கின்றன. டீச்சரின் கர்ச்சீஃபை முகர்ந்து பார்க்கும் சிவனைந்தன், பூங்கொடி என்ற பெயர் வரும் சினிமா பாடல்களில் தன்னை மறக்கிறான்.  

இயக்குநர் மாரி செல்வராஜ் மாற்று சினிமா ஆர்வலர் என்பதால், அந்தக் காட்சியில் டீச்சரும் மாணவனும் பாடும் ஆடும் கனவுக் காட்சிகள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார். ஆனால் சந்தோஷ் நாராயணனுக்கு அம்மாதிரி தடையேதும் இல்லை. அவர் செவிப்புலனுக்காக வேலை செய்பவர். தூலமாகக் காண்பிக்க வேண்டிய சிக்கல் இல்லாதவர். அதனால் அந்தக் கர்ச்சீஃப் வரும் காட்சிகளிலெல்லாம் மனிதர் பூந்து விளையாடுகிறார். படத்தைப் பார்க்கும் நமக்கே ஆர்கஸம் வந்துவிடும் போலிருக்கிறது. எங்கே படம் பாசாங்காகப் போகிறது என்றால் பையனின் ஆர்கஸம் அறவே மறைக்கப்படுகிறது என்பதில்தான் என சுட்டிக் காட்டியுள்ளார்.    

இது எதுவுமே செக்ஸ் அல்ல, ஒரு க்ரஷ் என்பதாகவே படம் முழுக்கவும் நிறுவப்படுகிறது. இந்த suppression of sex தான் தமிழ் இலக்கியத்திலும் சினிமாவிலும் இதுகாறும் நடந்து வந்திருக்கும் சமூகவிரோத காரியம். அந்த வகையில் வாழையை ஒரு ஆபாசப் படம் என்றே சொல்லுவேன். ஜப்பானிய இயக்குனர் Nagisa Oshima எதை நீங்கள் மறைக்கிறீர்களோ அதுதான் ஆபாசம், எது இருக்கிறதோ அதைக் காண்பிப்பது ஆபாசம் அல்ல என்கிறார். அவருடைய In the Realm of the Senses அதற்கு ஒரு உதாரணம். மாரி செல்வராஜ் அந்தப் படத்தை பார்க்க வேண்டும் எனவும் சாரு நிவேதிதா சிபாரிசு செய்துள்ளார்.  

மேலும், பூங்கொடி டீச்சர், மாணவன் சிவனைந்தன் வரும் காட்சிகள் அனைத்துமே பூடகமான செக்ஸ் விளையாட்டுகள்தான். சிவனைந்தன் நடிகர் கமல்ஹாசனின் மாதிரி வடிவமாகவே உருவாக்கப்பட்டிருக்கிறான். அவனாக டீச்சரின் மீது தன் ‘காதலை’ உணர்த்தும் செயல்களில் ஈடுபடுவதில்லை. அவன் கமல்ஹாசனைப் போல் ஒரு macho ஆண். அவனுடைய பார்வை, திமிர், நடை எல்லாமே “டீச்சர், நீ எனக்கு டீச்சராக இருக்கலாம்; என்னை விட ஏழெட்டு வயது பெரியவளாக இருக்கலாம், ஆனால் இது காதல், நீதான் என்னைப் பின் தொடர வேண்டும்” என்ற செய்தி சிவனைந்தனின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரிவதை போலவே அவர்கள் இருவரும் வரும் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என விமர்சித்துள்ளார். 

அதேபோல், சிவனைந்தன் வாழைத் தார் சுமக்கப் போகாமல் காலில் முள் குத்தி விட்டதென்று சொல்லி அதிலிருந்து தப்பி, அவர்கள் வீட்டு மாட்டை அவிழ்த்துக்கொண்டு அதை மேய்க்கப் போகிறான். அந்த நேரம் பார்த்து வயல் காட்டுச் சாலை வழியே தன் மொபெட்டில் ஒரு நெல் மூட்டையை எடுத்துக்கொண்டு மில்லுக்குப் போகும் பூங்கொடியைப் பாக்கிறான். மாட்டை அங்கேயே ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விட்டு டீச்சரின் மொபெட்டின் முன்பக்கம் அமர்ந்து போகிறான். இது எல்லாமே பாலியல் சமிக்ஞைகளை வெளிப்படையாக உணர்த்தும் காட்சிகள். அதுவுமில்லாமல், சிவனைந்தன் என்ன சொன்னாலும் டீச்சர் ஒரு சினிமா காதலியைப் போலவே பச்சையாக சிரித்துக்கொண்டு பதில் சொல்கிறாள். சிவனைந்தனின் தலைமுடியைக் கலைக்கிறாள்.  அப்படியே குத்திட்டு அமர்ந்து அவனுக்கு ப்ளோஜாப்தான் செய்துவிடாதது மட்டும்தான் குறை.  அந்த அளவுக்குப் பச்சையாக இருக்கின்றன டீச்சர் – சிவனைந்தன் காட்சிகள் என கடுமையாக விமர்சித்துள்ளார். 

கடைசியில் பள்ளி ஆண்டு விழா என்ற கணக்கில் டீச்சர் சிவனைந்தனோடு சேர்ந்து (இன்னும் நாலைந்து பையன்களும்) ஒரு குத்துப் பாட்டுக்கும் ஆடுகிறாள். படத்தில் வரும் மிக முக்கியமான பாலியல் சமிக்ஞை டீச்சர் பூங்கொடியாக நடிக்கும் நிகிலா விமலின் உருவத் தோற்றம். படத்தில் வரும் மற்ற எல்லா ஆண்கள், பெண்களின் உருவத் தோற்றத்தையும் நிகிலாவின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கே நான் சொல்ல வருவது புரிந்துவிடும். நிகிலாவின் உருவமும் நிறமும் தெரிவிக்கும் பாலியல் சமிக்ஞை ஒன்றுபோதும், வாழை ஒரு soft porn படம் என்பதை நிரூபிக்க. நான் நிகிலாவின் உருவம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அந்த குக்கிராமத்தில் எப்படி நிகிலாவின் உருவம் மற்றவர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது என்பதைக் குறிப்பிடுகிறேன்.  தமிழ்நாட்டு நகரங்களில் கூட இப்படிப்பட்ட அழகிகளைக் காண்பது அரிது என்கிறபோது, படத்தில் வரும் குக்கிராமத்தில் எப்படி? என்னதான் வெளியூரிலிருந்து வேலையின் பொருட்டு கிராமத்துக்கு வந்த டீச்சர் என்று நாமே அர்த்தப்படுத்திக் கொண்டாலும் அதற்காக இப்படியா? அந்தப் பள்ளியில் பணிபுரியும் மற்ற டீச்சர்களையும், சிவனைந்தனின் அம்மாவையும், அக்காவையும் நிகிலாவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் புரிந்துவிடும் என்றுள்ளார். 

இந்தப் படத்தில் நிகிலாவுக்குப் பதிலாக நிஜமாகவே அந்த கிராமத்துப் பெண்கள் எப்படி இருப்பார்களோ அப்படி ஒருவரை நடிக்க வைத்திருந்தால் வாழை இந்த வெற்றியை அடைந்திருக்குமா? வாழையின் டீச்சர் – சிவனைந்தன் காட்சிகள் பொய்யானவை, பாசாங்கானவை. ஏனென்றால், பதின்மூன்று வயதுப் பையன் இப்படி ஒரு அழகி தன்னிடம் வழிந்தாள் என்றால், தொட்டுத்தொட்டுப் பேசினாள் என்றால், அவள் உடல் மீது தன் உடலைச் சேர்த்துக்கொண்டு விடுவான். அல்லது, குறைந்தபட்சம் கர மைதுனமாவது செய்வான். அதுதான் நிஜம். ஆனால் நிஜத்தைச் சொன்னால் படம் ஊற்றிக்கொண்டு விடும். தமிழ் மகாஜனங்களுக்கு நிஜம் பிடிக்காது.  ஆபாசப் படம் என்று கழுவி ஊற்றி டின் கட்டி விடுவார்கள். மாரி செல்வராஜ் இப்படி கோடி கோடியாகக் கல்லா கட்டியிருக்க முடியாது. ஏன், போட்ட பணத்தையே எடுத்திருக்க முடியாது. அதனால்தான் பொய் சொல்லி, பாசாங்கு செய்கிறார் என விமர்சித்துள்ளார். 

மேலும் வாழை பார்க்க தியேட்டர் செல்லும் பார்வையாளர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்.  ஸ்கர்ட் அணிந்த பெண்கள். அதனால் திரையரங்கம் ஒரு பப்பில் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தியது. வெறும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாழைத்தார் சுமக்க ஒரு ரூபாய் கூலி என்பதை இரண்டு ரூபாயாக உயர்த்திக் கொடுக்கச் சொன்னதற்காக நேர்ந்த இருபது பேர் மரணத்தைப் பார்க்கவா இந்த அளவுக்குக் குட்டைப் பாவாடைப் பெண்கள் என்பது என்னைப் பல்வேறு விஷயங்களை யோசிக்க வைத்தது. 

தமிழ்நாட்டுப் பார்வையாளர்கள் வாழையை ஒரு மியூசியத்தில் இருக்கும் நூதன சாதனமாகவே பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இன்றைய தமிழ்ச் சமூகத்தில் நீங்கள் ஒரு வாழைத் தோட்டமோ தென்னந்தோப்போ வைத்திருந்தால், அதில் வேலை செய்ய ஆள் கிடைக்காமல், போட்ட காசும் கிடைக்காமல் தற்கொலைதான் செய்து கொள்வீர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாழைத் தோட்ட முதலாளி தான் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு ரூபாய் கூலியை இரண்டு ரூபாயாக உயர்த்திக்கொடுக்க பிரச்சினை பண்ணுகிறான். தொழிலாளர்கள் போராடி அந்த ஒரு ரூபாய் கூலி உயர்வைப் பெறுகிறார்கள். அதற்கு ஈடு கட்டுவதற்காக முதலாளி தொழிலாளர்கள் வீட்டுக்குத் திரும்ப அந்த வாழை லோடு லாரியிலேயே போய்க்கொள்ளச் சொல்கிறான். எடை தாங்காமல் லாரி தலைகீழாகச் சாய்ந்து ஒரே ஊரில் இருபது பேர் சாகிறார்கள்.

இன்றைய நிலைமை என்னவென்றால், ஒரு ரூபாய் அல்ல, நூறு ரூபாய் கூலி கொடுத்தாலும் வேலை செய்ய ஆட்கள் இல்லை. எல்லோருக்குமே இலவச உணவும் டாஸ்மாக்கில் கோட்டர் போட 80 ரூபாய் பணமும் கிடைத்துவிடுகிறது. தோட்ட முதலாளிக்கு இரண்டே வழிகள்தான்.  ஒன்று, தற்கொலை செய்துகொள்ளலாம். இரண்டு, அடிமாட்டு விலைக்கு தோட்டத்தை விற்றுவிட்டு டவுனுக்கு வந்து ஆட்டோ ஓட்டலாம். நகரங்களின் நிலைமை இன்னும் மோசம்.  வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் பீஹாரிலிருந்தும், இன்னும் பல வட மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டுக்கு வந்து இறங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

இதனால் நான் முதலாளிகளின் பக்கம் பேசுகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். நான் வீடு மாற்றுவதற்காக ஒரு வட இந்திய நிறுவனத்தை அணுகினேன். அவர்களின் தொழிலாளிகள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தினமும் பதினெட்டு மணி நேரம் கொடூரமான எடையைத் தூக்குகிறார்கள். மாதச் சம்பளம் எட்டாயிரம் ரூபாய் என்றார்கள். இப்படியான சுரண்டலும் நடந்து கொண்டிருக்கிறது. சுரண்டலின் இடமும் களமும் இன்று மாறி விட்டது. அடுத்து, இந்த 25 ஆண்டுகளில் பள்ளிக்கூடங்களின் நிலைமையும் தலைகீழாக மாறிவிட்டது. பையன்கள் தண்ணி போட்டுவிட்டு வந்து வாத்தியாரைப் பார்த்து கொச்சையாக திட்டுகிறான். கிராமங்களில் நடக்கிறது.  வாத்தியாரால் எதுவுமே செய்ய முடியவில்லை. பதிலுக்குத் திட்டினால் வேலை போய்விடும்.  இதற்கு சமமாக மாணவிகளும் பாட்டிலை வகுப்பறைக்கே எடுத்து வந்து தண்ணி அடித்துவிட்டு ரீல்ஸ் போடுகின்றன. முகத்தைக் கூட மறைப்பதில்லை. இயக்குனர்களே, நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார் சாரு நிவேதிதா. 

அதேபோல், விந்து, கண்ணீர், பார்வையாளர்களிடம் இந்த இரண்டையும் வரவழைத்து வெற்றி அடைந்துவிட்டார் இயக்குநர் மாரி செல்வராஜ். மரணமும் செக்ஸும் ஒன்றுதான் என்கிறார் ஃப்ரெஞ்ச் தத்துவவாதி ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille). தூக்கு மாட்டி சாகும்போது விந்து வெளிவரும். செக்ஸின் போது மரணத்தைப் போலவே நம்மை மறக்கிறோம். ஆனால் வாழை படத்தில் பூங்கொடி டீச்சர் கதைக்கும், வாழைத்தோட்டத் தொழிலாளர்கள் கதைக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு ரூபாய் கூலி உயர்வு கேட்டார்கள், முதலாளியின் சுரண்டல் குணத்தால் இருபது தொழிலாளர்கள் செத்தார்கள் என்ற கண்ணீர்க் கதையை மட்டும் சொன்னால் மக்களிடையே எடுபடாது. இதனால் தான் இயக்குநர் டீச்சரின் soft porn கதையையும் இடையில் சேர்த்திருக்கிறார்.  அதிலும் படு பாசாங்காக. 

தமிழ் காம இணையதளங்களில் அண்ணி கதைகள், சித்தி கதைகள், அப்பா – மகள் கதைகள், அம்மா – மகன் கதைகள் என்றெல்லாம் பல உண்டு. அதில் ஒரு முக்கியப் பிரிவு டீச்சர் கதைகள்.  அந்தக் கதைகளின் தரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு வாழை என்ற பெயருக்குப் பதிலாக பூங்கொடி டீச்சரின் கர்ச்சீஃப் கதை என்று பெயரிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் அந்தப் பாலியல் தளங்களில் வரும் டீச்சர் கதைகளில் வாழை மாதிரி பொய் சொல்லமாட்டார்கள். வாழையில் பொய்யும் பாசாங்கும் மட்டுமே இருக்கிறது. 

சரி, வாழைத் தோட்ட முதலாளியின் சுரண்டல் கதை சரியாக சொல்லப்பட்டிருக்கிறதே என்று கேட்கலாம். இருபது பிணங்களைப் போட்டு ஒப்பாரிப் பாடலை ஒலிக்கச் செய்து பார்வையாளர்களைக் கண்கலங்க வைப்பதும், தாய்லாந்து லைவ் ஷோவில் ஆணையும் பெண்ணையும் உடலுறவு கொள்ள வைத்து பார்வையாளர்களை கிளர்ச்சி அடைய செய்வதும் அடிப்படையில் ஒன்றுதான். ஜார்ஜ் பத்தாயை நினைவு கூர்க. அப்படியென்றால், வறுமையையும் சுரண்டலையும் சினிமாவில் காண்பிக்கவே முடியாதா? முடியும். லூயில் புனுவெலின் The Young and the Damned (1950) என்ற படத்தையும் Land Without Bread (1933) என்ற படத்தையும் பாருங்கள். அதோடு, ஜார்ஜ் பத்தாயின் நாவலான மை மதர் என்ற நாவல் அதே பெயரில் படமாக்கப்பட்டிருக்கிறது. மேற்கத்திய சினிமாவில் செக்ஸை எப்படி பொய்யில்லாமல், பாசாங்கு இல்லாமல் அணுகுகிறார்கள் என்று தெரியும் என தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக இந்த விமர்சனத்தில் சாரு நிவேதிதாவின் பின்குறிப்பும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்க - விஜய்யின் கோட் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

அதில், ஒரு கற்பனை செய்து பாருங்கள். பூங்கொடி டீச்சருக்குப் பதிலாக பொன்னுசாமி என்று ஒரு வாத்தியார். சிவனைந்தன் என்ற பையனுக்குப் பதிலாக சிவரஞ்சனி என்ற 13 வயதுப் பெண்.  பூங்கொடி டீச்சர் சிவனைந்தனின் தலைமுடியைத் தொட்டு seduce பண்ணுவதைப் போலவே பொன்னுசாமி வாத்தியார் சிவரஞ்சனியின் தலைமுடியைத் தொட்டும் தடவியும் seduce செய்கிறார்.  இந்நேரம் இயக்குநர் மாரி செல்வராஜை paedaphile கேஸில் உள்ளே தள்ளியிருப்பார்கள்தானே?  அப்படியிருக்க, ஆண்பிள்ளை என்றால் மட்டும் என்னாங்கடா மன்னிப்பு? ஆண்பிள்ளையை மட்டும் ஒரு டீச்சர் seduce பண்ணலாமா? அப்படிச் செய்தால் அதை வெற்றிப் படம் ஆக்குவீர்களா? என்ன அயோக்கியத்தனம் இது? இதையெல்லாம் கேள்வி கேட்பார் இல்லையா? என பதிவிட்டுள்ளார் சாரு நிவேதிதா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow