சபரிமலையில் ஓணம் பண்டிகை.. ஐயப்பன் கோவில் நடை 13ல் திறப்பு - 2 நாட்களுக்கு விருந்து
ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் 15, 16 ஆகிய தேதிகளில் ஓண விருந்து வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15ஆம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருவோணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை திறந்து வைக்கிறார்.
ஆவணி மாதம் சிம்ம மாதம் கேரளாவில் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாப்படும். பாதாள லோகத்தில் வசிக்கும் மகாபலி மன்னன் திருவோணத்திருநாளில் தங்களை காண வருகிறார் என்பது ஐதீகம்.ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை வீடுகள் தோறும் அத்த பூக்கோலம் இட்டு மகாபலி மன்னனை வரவேற்பார்கள்.
இந்த ஆண்டு வயநாடு நிலச்சரிவு பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் ஓணம் பண்டிகையை அரசு விழாவாக கேரள அரசு கொண்டாடவில்லை. அதே நேரத்தில் கோவில்களிலும் மலையாள மக்கள் வசிக்கும் பிற மாவட்டங்களிலும் ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
15ஆம் தேதி திருவோண சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் அனைவருக்கும் 15, 16 ஆகிய தேதிகளில் ஓண விருந்து (சத்யா) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான மாத பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?