சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம்.. ஜாபர் சாதிக் வழக்கில் நீதிமன்றம் அதிரடி

தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sep 11, 2024 - 16:38
Sep 11, 2024 - 16:56
 0
சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம்.. ஜாபர் சாதிக் வழக்கில் நீதிமன்றம் அதிரடி

திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் (Jaffer Sadiq) கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக்கை கைது செய்த டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ஜாபர் சாதிக். மேலும், அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கடந்த 28ம் தேதி கைது செய்தனர். இதனை எதிர்த்து ஜாபர் சாதிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ஜாமின் பெற்றாலும், ஜாபர் சாதிக்கால், சிறையில் இருந்து வெளியே வர முடியாது நிலை ஏற்பட்டது. ஏனென்றால், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சென்னை அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ள நிலையில், அந்த வழக்கில் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக சென்னை மற்றும் மும்பையில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் சர்வதேச போதை பொருள் கடத்தலில் பெரும் மூளையாக செயல்பட்டுள்ளதாகவும், இந்த கடத்தல் மூலமாக கிடைத்த சட்ட விரோத பணத்தால் பயனைடைந்த பிரதான பயனாளி என்பதற்கான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக், அவரது சகோதரர் சலீம் உட்பட மொத்தம் ஏழு பேரை மத்திய போதை பொருள் தடுக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஜாஃபர் சாதிக்கின் சகோதரர் சலீமையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில், கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும், போதைப் பொருள் கடத்தில் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் வழங்கப்பட்ட சிறைமாற்ற உத்தரவின் அடிப்படையில், தன்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தது சட்டவிரோதம் என ஜாஃபர் சாதிக் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, ஜாமீனில் விடுதலையான நபரை சட்டவிரோதமாக சிறையில் வைத்து நீதிமன்றக் காவலில் அடைக்க பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதோடு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறினார். 

அமலாகக்த்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ‘ஜாமின் வழங்கப்பட்டு பிறகும் வெளியே விடாமல் சிறையில் வைத்திருந்ததற்காக வேண்டுமானால் திஹார் சிறை நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து நிவாரணம் கோரிலாம். ஆனால், சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய முடியாது’ என கூறினார். 

ஜாமீன் வழங்கிய பின்னர் வெளியில் விடாமல் சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் அதற்காக தனியாக நிவாரணம் கோரலாம் என தெரிவித்தனர். இதனையடுத்து, சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow