துதிபாடுவதும், காலில் விழுவதும் தான் கொத்தடிமை திமுகவுக்கு சுயமரியாதை... அர்ஜுன் சம்பத் தாக்கு

திமுக கொத்தடிமைகள் கூடாரம், உதயநிதி துதிபாடுவதும், காலில் விழுவதும் தான் திமுகவினரின் சுயமரியாதை என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Aug 13, 2024 - 18:27
Aug 14, 2024 - 09:59
 0
துதிபாடுவதும், காலில் விழுவதும் தான் கொத்தடிமை திமுகவுக்கு சுயமரியாதை... அர்ஜுன் சம்பத் தாக்கு
உதயநிதி ஸ்டாலின் மற்றும் அர்ஜுன் சம்பத்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி முருகன் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், “பெண்கள் கடத்தப்படும், கட்டாய மதமாற்றம் செய்யப்படும், சமீபத்தில் நடைபெற்ற அரசியல் மாற்றத்தால் விரட்டியடிக்கப்படும் இந்துக்களை பாதுகாத்திட ஐ.நா மன்றம் தலையிட வேண்டும்.

ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் கூழ் வார்க்கும் நிலையில், ஆலயங்களில் கூழ் வார்ப்பதற்கு தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கிட வேண்டும். வங்கதேச இந்துக்களை பாதுகாத்திட வேண்டும் என ப்ரியங்கா காந்தி, கம்யூனிஸ்ட் கட்சியினர் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. மத அடிப்படையில் இந்துக்கள் ஒடுக்கப்படும் போது இந்துக்களை பாதுகாத்திட திமுகவும் குரல் கொடுத்திட வேண்டும்.

மணிப்பூர் பெண்களுக்காகவும், காஷ்மீருக்காகவும் போராடிய கனிமொழி குரல் கொடுக்காதது ஏன்? கருணாநிதியை தென் நாட்டு முஜிபுர் ரஹ்மான் என அழைத்த நிலையில் இப்போது கனிமொழி குரல் கொடுக்காதது ஏன்? வங்கதேசத்தில் வந்த இஸ்லாமிய பெண்ணிற்கு நாம் அடைக்கலம் கொடுத்துள்ளோம். அங்குள்ள இந்துக்களுக்கு யார் அடைக்கலம் கொடுப்பது?

தமிழ்நாட்டில் வக்பு சொத்துக்கள் என்ற போர்வையில் பழனி, திருச்சி, கிராமங்களில் அவர்களுடைய சொத்துக்கள் என கூறுகின்றனர். இவற்றை சரிசெய்திட சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு நன்மை பயக்கும்.

மல்யுத்த வீரர்களை வினேஷ் போகத் உடல் கூடுதல் எடையால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பாஜக காரணம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுவது தவறான குற்றச்சாட்டு. பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைவரும் அவருக்கு உருதுணையாக நிற்கிறோம். இதில், செல்வப்பெருந்தகை மலிவான அரசியல் செய்கிறார். இதில் அரசியல் செய்வது செல்வப்பெருந்தகையின் சின்ன புத்தியை காட்டுகிறது.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே மூழ்கி போன கப்பல். மூப்பனார், காமராஜர் போன்ற தலைவர்கள் வழிநடத்திய கட்சியை செல்வப்பெருந்தகை தற்போது காப்பாற்றிடவா போகிறார்? செல்வப்பெருந்தகை திமுகவின் ஏஜென்ட்டாக இருக்கிறார். காங்கிரஸ் என்பது தமிழ்நாட்டில் முடிந்து போன சகாப்தம். தமிழ்நாட்டில் காமராஜரின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர கூடிய வல்லமை அண்ணாமலைக்கு மட்டுமே இருக்கிறது. தேசிய கட்சி மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்றால் அது பாஜகவால் மட்டும் தான் முடியும்.

திமுகவினர் நாடாளுமன்றத்திலேயே மக்கள் பிரச்சினைகள் பேசாமல் ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க என கூறுகிறார்கள். வருங்காலத்தில் இன்பநிதி வாழ்க எனவும் கூறுவார்கள். அது கொத்தடிமைகள் கூடாரம் என்பதற்கு இது உதாரணம். உதயநிதி இப்போதே சர்வ வல்லமை பொருந்திய அமைச்சராகவே உள்ளார். அது வாரிசு அரசியல், இதில் நாம் கருத்து கூற வேண்டிய அவசியம் இல்லை.

மூத்த கட்சித் தலைவர் துரைமுருகனே இன்பநிதி வந்தாலும் ஏற்று கொள்வேன் என கூறியுள்ளார். பெரியார், சுயமரியாதை இயக்கம் என அவர்கள் கூறுவார்கள். அவர்களது சுயமரியாதை, கலாச்சாரம் எல்லாம் காலில் விழுவது, உதயநிதி துதிபாடுவது, உதயநிதி மனைவி காலில் விழுவது தான்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow