மாநில அரசுக்கு கல்வி நிதி நிறுத்தி வைப்பு..தேசிய கல்விக்கொள்கையை திணிக்க முயற்சி.. ஸ்டாலின் கண்டனம்
தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதால் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்துக்கு மத்திய அரசின் நிதி இன்னும் ஒதுக்கப்படாததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் சமத்துவத்தை மத்திய அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டுள்ளார். அதை முடிவு செய்ய நம் தேசம் மற்றும் நம் மக்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன் என்று மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் “பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு மறுத்ததால் ரூ .2,000 கோடி நிறுத்தம் என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் புதியக் கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்து மாநில கல்விக்கொள்கைக்கான குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்தக்குழுவின் அறிக்கை முதல்வரிடம் அண்மையில் வழங்கப்பட்டது.
இதனிடையே புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய அரசு, பிரதம மந்திரியின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டம்’ (Pradhan Mantri Schools For Rising India) என்ற திட்டத்தை உருவாக்கியது. கடந்த 2022, செப்டம்பர் மாதம் ஆசிரியர் தினத்தன்று, இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்றழைக்கப்படும் அந்தத் திட்டத்தில், ‘நாடெங்கும் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் 14,500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நவீன வசதிகள் செய்யப்பட்டு புதியக் கல்விக்கொள்கையின் ஆய்வகங்களாக மாற்றப்படும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், அரசு பள்ளிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து, புதிய கல்வி கொள்கையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பள்ளிகளை நடத்துவதே பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டம் ஆகும்.
இந்நிலையில், பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டுவதால், தமிழகத்தின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளது. பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ் திட்டத்தை ஏற்காததால் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஒதுக்கும் ரூ .2,000 கோடியை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்வி மற்றும் சமத்துவத்தை மத்திய அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதை முடிவு செய்ய நம் தேசம் மற்றும் நம் மக்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன் என்றும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?