Budhan Peyarchi 2024 : புதன் பெயர்ச்சி : சிம்மத்தில் சூரியனுடன் இணைந்த புதன்.. கவனமாக இருக்க வேண்டியது யார்?

Budhan Peyarchi Palangal 2024 in Tamil : புதன் பகவான் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் கடகம் ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். சூரியனுடன் இணைந்து பயணம் செய்யும் புதனால் 12 ராசிக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

Sep 7, 2024 - 14:14
Sep 7, 2024 - 14:24
 0
Budhan Peyarchi 2024 : புதன் பெயர்ச்சி : சிம்மத்தில் சூரியனுடன் இணைந்த புதன்.. கவனமாக இருக்க வேண்டியது யார்?
Budhan Peyarchi Palangal 2024 in Tamil

Budhan Peyarchi Palangal 2024 in Tamil : புதன் கிரகம் அறிவு காரகன், பேச்சின் அதிபதியாக திகழ்கிறார். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். கடகம் ராசியில் இருந்த புதன் செப்டம்பர் 4ஆம் தேதி இரவு முதல் சிம்ம ராசியில் அமர்ந்துள்ளார். சூரியனுடன் இணைந்து பயணிக்கும் புதன் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தை தரப்போகிறார் என்று பார்க்கலாம். 

புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான்  அறிவு, ஆற்றல்,  கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். நரம்பின் நாயகன் புதனுக்கு மிதுனம், கன்னி ஆட்சி வீடு. தனது வீடான கன்னி ராசியில் உச்சமடையும் புதன், மீனத்தில் நீச்சமடைகிறார். ஒருவரின் ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டால் பேச்சு பாதிப்பு, நரம்பு பிரச்சினை, மனநோய் பாதிப்பு ஏற்படும். இந்த  புதன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன நன்மை நடைபெறும். யாருக்கு பரிகாரம் என பார்க்கலாம்.

மேஷம்

உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் சூரியனுடன் புதன் பயணம் செய்வதால் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். பணியிடத்தில் புத்திசாலித்தனம் வெளிப்படும். அதிர்ஷ்ட வழியில் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். கூடவே பிள்ளைகளுக்கு படிப்பு செலவும் அதிகரிக்கும். எழுத்து பேச்சுத்திறமையும் அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும்.  நன்மைகள் அதிகரிக்க விஷ்ணு சகஸ்ராநாமம் கூறி பெருமாளை வணங்கலாம்.

ரிஷபம் 

உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் திருப்தி ஏற்படும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். வீடு, வண்டி வாகன பராமரிப்புக்காக பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி அழகுபடுத்துவீர்கள். தினந்தோறும் ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை கூறி மகாவிஷ்ணுவை வணங்கலாம். 

மிதுனம்

உங்கள் ராசிநாதன் புதன் 3வது இடத்தில் பயணம் செய்கிறார். புது முயற்சிகள் செய்ய நல்ல நேரமாகும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரம் இதுவாகும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். தாய்மாமனுடன் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். எழுத்தாளர்களுக்கு நன்மை தரும் காலமாகும். புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால் நன்மைகள் அதிகரிக்கும். 

கடகம் 

உங்கள் ராசியில் பயணம் செய்த புதன் இந்த வாரம் முதல் 2வது வீட்டில் தன, வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பேச்சில் இனிமை அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பாக்கெட்டில் பணம் சேரும் சொத்து சோ்க்கை உண்டு. உடல் நிலையில் கவனம் தேவை. புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிய  மேலும் நன்மைகள் நடக்கும். புதன்கிழமைகளில் பச்சைப்பயறு தானம் செய்யலாம். 

சிம்மம் 

உங்கள் ராசியில் புதன் அமர்ந்துள்ளதால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு ப்ரமோசனுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு அதிகரிக்கும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். புதன்கிழமைகளில் ஏழை பிராமணருக்கு சர்க்கரை தானம் செய்யலாம்.

கன்னி

உங்கள் ராசிநாதன் புதன் இனி 12வது வீடான விரைய ஸ்தானத்தில் அமர்வதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள், வாக்குவாதம் வந்து செல்லும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு நரம்பு பிரச்சினை, கை,கால்கள் நடுக்கம், புத்தியில் தடுமாற்றம் சிலருக்கு வரும் என்பதால் இதனை தடுக்க மகா விஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். ஸ்ரீராம நாம ஸ்தோத்திரத்தை கூறி வணங்கலாம்.

துலாம் 

புதன் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வருமானம் அதிகரிக்கும். இது யோகமான காலமாகும்.  திடீா் அதிர்ஷ்டம் மூலம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. புதன் 11ம் வீட்டில் அமா்ந்திருக்கும்போது வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். தினசரியும் சூரிய பகவானை வழிபட நல்லதே நடக்கும். 

விருச்சிகம்

புதன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் பயணம் செய்வதால்  வேலை செய்யும் இடத்தில் திறமை அதிகரிக்கும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் கைகூடும். பண வருமானம் திருப்தி தரும். தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் நன்மை செய்வார்கள். மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவில் படிக்க இடம் கிடைக்கும். 

தனுசு

புதன் பகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் பயணம் செய்வதால் பணம் தாராளமாக வரும். பெற்றோர்களின்  உடல்நிலையில் கவனம் தேவை. சிலருக்கு புரமோசனும் ஊதிய உயர்வும் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும் காலமாகும். மாணவர்களுக்கு கல்லூரிகளில் மேல்படிப்புக்கு இடம் கிடைக்கும். பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதன் காயத்ரி மந்திரத்தை கூறி வர தீமைகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

மகரம்

புதன் பகவான் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் மறைகிறார். இது நல்ல அமைப்புதான் என்றாலும் வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். இடம் பொருள் அறிந்து பேசினால் நல்லதே நடக்கும். பண வருமானம் நன்றாக இருக்கும்.  வேலை செய்யும் இடத்தில் சம்பள உயா்வு பெறுவீா்கள். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். பசுவிற்கு பச்சைப்பயறு சாப்பிட கொடுக்கலாம். 

கும்பம் 

உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் புதன் பகவான் பயணம் செய்வதால் வீட்டில் தம்பதியரிடையே சின்னச்சின்ன சண்டை வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி அப்புறம் தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் ஏற்படும். புதன்கிழமை பசுவிற்கு வெல்லம் கொடுக்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மீனம் 

6வது இடமான ருண ரோக ஸ்தானத்தில்  பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும். புகழும் செல்வமும் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். வீட்டில் கணவன்,மனைவியரிடையே உற்சாகம் அதிகரிக்கும். கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். தோல் நோய்கள் ஏற்படலாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம் இதுவாகும். பெருமாள் கோவில்களில் நெய் விளக்கேற்றி வழிபட நன்மையே நடக்கும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow