அரசே மது விற்பது வெட்கக்கேடு..கொதித்த திருமாவளவன்.. நிர்மலா சீதாராமன் கொடுத்த பதிலடி
டெல்லி: மாநில அரசே மது விற்பது வெட்கக்கேடு என மக்களவையில் திருமாவளவன் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மாநில அரசு மது விற்பது இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் என்றும் இந்தியா முழுவதும் தேசிய மதுவிலக்கு கொள்கை அமல்படுத்த வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் 19ஆம் தேதி விஷ சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கள்ளச்சாராயத்தினால் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய மரண சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக போராட்டம் நடத்தியது. அதே போல திமுக கூட்டணி கட்சியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கடந்த 24ஆம் தேதி ஆர்பாட்டம் நடத்தியது. ஆர்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய திருமாவளவன் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினார்.
நீட் தேர்வு நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதைப்பொருள் புழக்கத்தில் உள்ளது.4 மாநிலங்கள் தவிர அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை செய்யப்படுகிறது. மாநில அரசு மது விற்பது இளைஞர்களுக்கு செய்யும் துரோகம். இந்தியா முழுவதும் தேசிய மதுவிலக்கு கொள்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.
திருமாவளவன் பேச்சுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் பதில் அளித்தார். திருமாவளவன் கூட்டணி வைத்திருக்கும் திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்தனர் என்றார். மத்திய அரசு மதுவை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தும் திருமாவளவன் முதலில் தான் கூட்டணியில் உள்ள தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க சொல்ல வேண்டும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார்.
What's Your Reaction?