தண்ணீரில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பலி.. புதுமனை புகுவிழாவில் நடந்த சோகம்

நெல்லை அருகே நண்பனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்ற, பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் வெள்ளநீர் கால்வாயில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

Sep 15, 2024 - 21:21
Sep 15, 2024 - 21:25
 0
தண்ணீரில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பலி.. புதுமனை புகுவிழாவில் நடந்த சோகம்
தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

நெல்லை ஜோதிபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரது மகன் அருண்குமார் (17), டக்கர்மார்புரத்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவரது மகன் நிகில் (17), கொக்கங்கந்தான் பாறையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மகன் ஆண்ட்ரூஸ் (17) ஆகிய மூன்று பேரும் ஜோதிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுகூர்பட்டி என்ற கிராமத்தில் உள்ள லட்சுமணன் புதிதாக வீடு கட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார். லட்சுமணனின் மகனும் ஜோதிபுரம் தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். நான்கு பேரும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில், அருண்குமார், நிகில், ஆண்ட்ரூஸ் மற்றும் சிலர் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

பின்னர் சாப்பிட்டு முடித்தவுடன் மாணவர்கள் ஆறு பேர் சேர்ந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்து, சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளநீர் கால்வாயில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். சுமார் 80 அடி நீளமுள்ள அந்த கால்வாயில் தற்போது சுமார் 30 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடக்கிறது.

இந்நிலையில் திடீரென அருண்குமார், நிகில், ஆண்ட்ரூஸ் ஆகிய மூன்று பேரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். இதை அறிந்த மற்ற மாணவர்கள் மூன்று பேரும் அவர்களை காப்பாற்றும் படி கூச்சலிட்டுள்ளனர். பின்னர் தங்கள் பெற்றோர்களிடம் நடந்ததை கூறியுள்ளனர்.

இதற்கிடயில் தகவல் அறிந்து பேட்டை சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீருக்குள் குதித்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட ஆண்ட்ரூஸ், அருண்குமார் ஆகிய இரண்டு பேரை முதலில் சடலமாக மீட்டனர். சுமார் 3 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு மற்றொரு மாணவன் நிக்கிலும் சடலமாக மீட்கபட்டார்.

மூன்று பேரின் உடலும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நடைபெற்ற சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுமனை புகுவிழாவுக்கு சென்ற இடத்தில் மாணவர்கள் மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow