திருமணத்தை மீறிய உறவு.. சிறுவனை அடித்துக் கொன்ற காதலன்.. வாக்குமூலம் அளித்த தங்கை

திருமணத்தை மீறிய உறவு காரணமாக 6 வயது சிறுவனை அடித்து கொலை செய்யப்பட்டார் என்று, உறவினர் கூறும் ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி உண்டாக்கி உள்ளது.

Oct 1, 2024 - 10:22
Oct 1, 2024 - 10:32
 0
திருமணத்தை மீறிய உறவு.. சிறுவனை அடித்துக் கொன்ற காதலன்.. வாக்குமூலம் அளித்த தங்கை
திருமணத்தை மீறிய உறவு காரணமாக 6 வயது சிறுவனை அடித்து கொலை!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேரு நகரில் வசிப்பவர் ஆனந்தன் இவரது மனைவி தனம். இந்த தம்பதிக்கு எட்டு வயதில் ஷோபனா என்ற மகளும் ஆறு வயதில் குகன் என்ற மகனும் உள்ளனர். சோபனா மூன்றாம் வகுப்பும், குகன் ஒன்றாம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்தனுக்கும், மனைவி தனத்துக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால், தனம் தன்னுடைய பிள்ளைகளுடன் தனியாக நேரு நகரில் வசித்துக்கொண்டு, பரந்தூர் நிலை எடுப்பு அலுவலகத்தில் மசால்சி வேலை செய்து வருகிறார்.

அதே அலுவலகத்தில் ராஜேஷ் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். ராஜேஷ் செவிலிமேடு அருகே வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தனத்துக்கும் ராஜேஷுக்கும் திருமணத்துக்கு மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் பெயரில் ராஜேஷ் அவ்வப்போது தனத்தின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை தனத்திடம் கூறிவிட்டு இரண்டு பிள்ளைகளையும் ராஜேஷ் அழைத்துக் கொண்டு செல்லும்போது, தனத்தின் அம்மா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போகாதே எனத் தடுத்துள்ளார். அதற்கு தனம், பிள்ளைகளை அழைத்துப் போகட்டும் என ராஜேஷுக்கு ஆதரவாக பேசி உள்ளார். அதன் பெயரில் ராஜேஷ் தனத்தின் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு செவிலி மேட்டில் உள்ள வாடகை வீட்டுக்கு சென்றுள்ளார்.

விடியற்காலையில் தனத்துக்கு போன் செய்து குகனுக்கு உடல் நலம் சரியில்லை, மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றேன் என கூறிவிட்டு குகனை வாகனத்தில் வைத்துக் கொண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே மருத்துவர்கள் குகனை பரிசோதித்து விட்டு ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்கள்.

மேலும் குழந்தையின் உடம்பில் ஆங்காங்கே ரத்த காயம் இருந்துள்ளதால் காவல்துறையினருக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து குகனின் சடலத்தை கைப்பற்றிய தாலுக்கா காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் சங்கராமன், பிரேத பரிசோதனைக்காக குகனின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ராஜேஷை கைது செய்து விசாரணை செய்தனர்.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை மாலை குகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள, தனத்தின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அருகே உள்ள இடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

இது தொடர்பாக குகனின் அக்காவும் மூன்றாம் வகுப்பு மாணவியுமான ஷோபனா, காவல்துறையினரிடம் வீட்டில் நடந்து குறித்து கூறியுள்ளார். அப்போது, ‘தன்னுடைய தம்பியை ராஜேஷ் அங்கிள் அடித்து மிதித்து தள்ளிவிட்டார். அதனால் என் தம்பி இறந்து விட்டான்’ என காவல்துறையிடம் தெளிவாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் ராஜேஷின் வீட்டில் இருந்த குகனின் ரத்தக்கரை படிந்த துணிமணிகளை காவல்துறையினர் கைப்பற்றி, குகனின் சாவில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதைப் பற்றி காவல்துறையிடம் கேட்டபோது, முழுமையான விசாரணைக்குப் பிறகு முழுமையான விவரங்கள் தெரியவரும் என கூறியுள்ளனர். திருமணத்தை மீறிய உறவு காரணமாகவே, 6 வயது சிறுவன் அநியாயமாக அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow