எதிர்காலத்தில் இப்படி செய்யக் கூடாது - காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 23ஆம் தேதி வழக்கு விசாரணை வந்தபோது அரசு தரப்பில் அணி வகுப்புக்கு அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அளித்த மனுக்களை, பரிசீலித்து வருவதாகவும், செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்றார்.
நீதிமன்ற உத்தரவுப்படி விதிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரும், ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அதற்கு முன்பாக, அனுமதிக்கோரிய விண்ணப்பங்கள் மீது பரிசீலித்து முடிவுகளை அறிக்கையாக தெரிவிக்க காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தமிழக காவல்துறையால் மறுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக வகுக்கப்பட்ட விதிமுறைகள் மீறியதால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற விதிகளின்படி கூடுதல் விவரங்களை அளித்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் கூறியிருந்தது.
பின்னர் 58 இடங்களில் அணி வகுப்பு நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், 42 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 16 இடங்களில் அனுமதி நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்தது.
மேலும், ஒரு மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அணி வகுப்புக்கு, பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருப்பதால் அனுமதி நிராகரிப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது. இந்த விவகாரத்தில் அரசும் காவல்துறையும், கண்ணாமூச்சி விளையாடுவதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது.
இதனையடுத்து, நீதிபதி பல இடங்களில் அற்ப காரணங்களைக் கூறி அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் அற்ப காரணங்களை கூறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
தவிர, ஒரு மாவட்டத்தில் ஒரு இடங்களுக்கு மேல் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் என தெரிவிக்கும் நிலையில், திமுக பவள விழா நிகழ்ச்சிக்கு ஒரே நாளில் பல்வேறு இடங்களில் எப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டது? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், புதிய நிபந்தனைகள் விதிக்க கூடாது எனவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
மேலும், அனுமதி மறுக்கப்பட்ட ஆறு இடங்களிலும், நிபந்தனைகளின் அடிப்படையில் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார். குறிப்பி்ட்ட மதத்தினர் வாழும் பகுதி, எதிர் கொள்கை நிலைபாடு கொண்ட மக்கள் வாழும்பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
What's Your Reaction?