Rajinikanth: அறுவை சிகிச்சை செய்யவில்லை... ஆனால்! ICU-ல் ரஜினி... லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்!
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்திற்கு, தற்போது ஐசியூ பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வேட்டையன் ரிலீஸ் பரபரப்புக்கு நடுவே கூலி படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, சில தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகள் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடுமையான வயிற்று வலி காரணமாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்தன. இதனுடன் அவருக்கு லேசான நெஞ்சு வலியும் செரிமான பிரச்சினையும் இருப்பதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரஜினிகாந்திற்கு இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். தேவைப்பட்டால் ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியிருந்தனர். அடி வயிறு வீக்கம், முதுகுவலி உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளும் ரஜினிக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் ரஜினிகாந்திற்கு அறுவை சிகிச்சை எதுவும் நடக்கவில்லை எனவும், அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்திருந்தனர். கூலி படப்பிடிப்பில் மழை காட்சியில் நடித்ததால் ரஜினிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதய சிகிச்சை நிபுணரின் பரிசோதனைக்கு பின்னரே ரஜினியின் அடுத்தக்கட்ட சிகிச்சை குறித்து தெரியவரும் எனத் தெரிகிறது. இதனிடையே ரஜினிகாந்திற்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். மேலும் தொடர்ந்து ரஜினிகாந்தின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக, அவரின் ரசிகர்களில் ஒருவனாக பிரார்த்திக்கிறேன் என ஆளுநர் ஆர்.என்.ரவியும் ட்வீட் செய்துள்ளார். இவர்களுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்த் விரைவில் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போதைய லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், 24 மணி நேர கண்காணிப்புக்குப் பின்னர் ஜெனரல் வார்டுக்கு மாற்றப்படுவார் என சொல்லப்படுகிறது. அதேபோல், ரஜினியின் அடிவயிற்றுக்கு அருகேயுள்ள ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால், அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் ஓரிரு தினங்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?