ஐபிஎல் 2025

35 பந்துகளில் சதம்...வைபவ் சூரியவன்ஷிக்கு குவியும் பாராட்டு

ஐபிஎல் தொடரில் 35 பந்துகளில் 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்சி சதம் அடித்து அசத்தியுள்ளார்

 35 பந்துகளில் சதம்...வைபவ் சூரியவன்ஷிக்கு குவியும் பாராட்டு
வைபவ் சூரியவன்சி சாதனை

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் அதிகவேக சதம் அடித்து 14 வயது சிறுவனான வைபவ் சூரியவன்ஷி சாதனை படைத்துள்ளார். குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 35 பந்துகளில் சதம் அடித்த வைபவ் சூரியவன்ஷி, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர், முதல் இளம் வீரர் என்ற சாதனைகளை படைத்துள்ளார்.

முன்னதாக 17 பந்துகளில் அரை சதம் அடித்த வைபவ் சூரியவன்ஷி, கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் விளாசிய இளம்வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

பிரபலங்கள் வாழ்த்து

அதேபோல் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய்க்கு அடுத்ததாக 2வது இடத்தில் வைபவ் சூரியவன்ஷி உள்ளார். இதேபோல் இந்த ஐபிஎல் தொடரில் வைபவ் சூரியவன்ஷி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்-வைபவ் சூரியவன்ஷி ஜோடி 166 ரன்களை குவித்தது. இதனிடையே ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் அடித்த வைபவ் சூரியவன்ஷிக்கு, கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.