ஐபிஎல் 2025

MI vs GT: கைக்கொடுக்காத கில்.. பும்ராவின் யார்க்கரில் மாறிய மேட்ச்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது. ஹார்திக்-சுப்மன் கில் இடையேயான ஈகோ, பும்ராவின் துல்லியமான யார்க்கர், ஹிட்மேனுக்கு அடித்த லக் என நேற்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி இருந்தது.

MI vs GT: கைக்கொடுக்காத கில்.. பும்ராவின் யார்க்கரில் மாறிய மேட்ச்
MI vs GT match highlights
18-வது ஐபிஎல் சீசனில், ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு பெங்களூரு அணி தகுதிப்பெற்றுள்ள நிலையில் நேற்றைய தினம் எலிமினேட்டர் போட்டி மும்பை-குஜராத் அணிகளுக்கு இடையே நடைப்பெற்றது.

என்ன ஈகோவா?

குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில், டாஸ் போடப்பட்ட சமயத்தில் ஷுப்மன் கில் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோருக்கிடையே ஒரு அசாதாரணமான சூழ்நிலை நிலவியது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்ற பிறகு, ஹார்திக் பாண்டியா வழக்கம்போல கைகுலுக்க கையை நீட்டினார், ஆனால் ஷுப்மன் கில் அதைக் கவனிக்கவில்லை. ஆனால், வேண்டுமென்றே விலகி சென்றதாக பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இருவருக்குமிடையேயான "ஈகோ மோதல்" காரணமாக இருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். சுப்மின் கில் அவுட்டாகிய போது, அவரை நோக்கி ஆக்ரோஷமாக ஹார்திக் பாண்டியா கத்திக்கொண்டு ஓடியது ஈகோ மோதலை உறுதிபடுத்தியுள்ளது எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆனால், போட்டி முடிவின் போது ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

ஹிட்மேனுக்கு அடித்த லக்:

மும்பை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரராக களமிறங்கி வந்த ரிக்கல்டன் டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடருக்காக தாயகம் சென்றதால் அவருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவினை ஒப்பந்தம் செய்தது மும்பை அணி. அந்த வகையில் நேற்று தொடக்க ஜோடியாக ரோகித் ஷர்மா- ஜானி பேர்ஸ்டோ இணை முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

ரோகித் சர்மாவுக்கு அடுத்தடுத்து இரண்டு கேட்சுகளை தவற விட்டனர் குஜராத் வீரர்கள். கிடைத்த வாய்ப்பை லட்டாக பயன்படுத்திக் கொண்டு அரைசதம் விளாசினார் ஹிட்மேன். ஜானி பேர்ஸ்டோவ் 22 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்ப சூர்யகுமார் யாதவ் உடன் கைக்கோர்த்து நல்ல பார்ட்னர் ஷிப் அமைத்தார் ரோகித். சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 33 ரன்கள் விளாசிய நிலையில், சிக்ஸர் அடிக்க முயன்று அவுட்டாகினார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த, ரோகித் சர்மா 50 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் குவித்தார். நடப்பு சீசனில் ரோகித் அடிக்கும் 4-வது அரைசதம் இதுவாகும். திலக் வர்மா (11 பந்துகளில் 25 ரன்கள்) மற்றும் கேப்டன் ஹார்திக் பாண்டியா (9 பந்துகளில் 22 ரன்கள்) எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது குஜராத் அணிக்கு.

கனவை கலைத்த சாய்: ஆட்டத்தை மாற்றிய பும்ரா

229 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆரம்பத்திலேயே கேப்டன் ஷுப்மன் கில் (1 ரன்) மற்றும் குசால் மெண்டிஸ் (20 ரன்கள்) ஆகியோரை இழந்தது. மறுமுனையில் சாய் சுதர்சன் ஒவருக்கு சில பவுண்டரிகளை விளாசி தனியாக போராடி வந்தார். இவருக்கு உறுதுணையாக வாஷிங்டன் சுந்தர் கைக்கொடுக்க ஒருகட்டத்தில் 13 ஓவர்களில் 150 ரன்களை குவித்தது குஜராத் அணி.

அவ்வளவு தான் முடிச்சுவிட்டீங்க போங்க என மும்பை ரசிகர்கள் துவண்டு போன நிலையில், பும்ரா மாயஜாலத்தை நிகழ்த்தினார். 13.4 -வது ஓவரில் யார்க்கர் ஒன்றை துல்லியமாக வீசினார், பும்ரா. லெக் ஆன் திசையில் அடிக்கவா இல்லை தடுக்கவா என வாஷிங்டன் யோசிப்பதற்குள் ஸ்டெம்பினை பதம் பார்த்தது பந்து. வாஷிங்க்டன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். விழுந்தது அவர் மட்டுமில்லை..மொத்த அணியும் தான்!

சிறப்பாக விளையாடி வந்த சாய் சுதர்சனும் 49 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 80 ரன்கள் குவித்து அவுட்டாக மற்ற வீரர்கள் இலக்கை துரத்துவதில் போதிய வேகம் காட்டவில்லை. முடிவில் குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மும்பை பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் ரன்களை வாரி வழங்கியிருந்தார். ஜஸ்பிரித் பும்ரா, ரிச்சர்ட் கிளீசன், சாண்ட்னர் மற்றும் அஷ்வினி குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறி அடுத்த கட்ட சவாலுக்குத் தயாராகியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த தோல்வியுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.